உக்ரைன் படையினருடன் இணைந்த தமிழ் மாணவர்.. அதிர்ச்சியில் கோவை.. துயரத்தில் பெற்றோர்!

உக்ரைன் ராணுவத்தில் இணைந்து, ரஷ்யப் படையினருக்கு எதிராக தமிழக மாணவர் ஒருவர் போரில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாணவர், இந்திய ராணுவத்தில் சேர 2 முறை விண்ணப்பித்தும், 2 முறையும் நிராகரிக்கப்பட்டவர் என்பது கூடுதல் தகவலாகும்.

கோவையைச் சேர்ந்தவர்
சைனிகேஷ் ரவிச்சந்திரன்
. 21 வயதான இவர் உக்ரைனில் உள்ள கார்கிவ் விமானவியல் கழகத்தில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்து வந்தார். இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் வெளிநாட்டினரும் வாலண்டியர்களாக பங்கேற்கலாம் என்று உக்ரைன் அரசு அழைப்பு விடுத்தது. இதை ஏற்று அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தன்னார்வத் தொண்டர்களாக இணைந்தனர். அவர்களில் சைனிகேஷும் ஒருவர் என தற்போது தெரிய வந்துள்ளது.

ஆயுதம் ஏந்தி கார்கிவ் நகருக்கு வெளியே ரஷ்யப் படையினருடன் நடைபெறும் மோதலில் சைனிகேஷும் ஈடுபட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை கீவ் இன்டிபென்டன்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த வெளிநாட்டுப் படையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்வீடன், லிதுவேனியா, மெக்ஸிகோ, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

சைனிகேஷ் ரவிச்சந்திரனின் வீடு, கோவை, சுப்பிரமணியபாளையம் பகுதியில் உள்ளது. அவர் உக்ரைன் போரில் கலந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி வெளியானதும் போலீஸ் படை ஒன்று அவரது வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்தியது. அவரது வீட்டையும் சோதனை போட்டனர். அப்போது சைனிகேஷின் அறை முழுக்க படை வீரர்களின் படங்கள் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.

ராணுவத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது சைனிகேஷின் சிறு வயது ஆசையாகும். 2018ம் ஆண்டு வித்ய விகாசினி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்டூ முடித்தார் சைனிகேஷ். படிப்பை முடித்ததும் ராணுவத்தில் இணைய விரும்பி விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு அது தோல்வியே கிடைத்தது. 2 முறை முயற்சித்தும் முடியவில்லை.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், இந்திய ராணுவத்தில் சேர முடியாமல் போனதால் சென்னை சென்று அமெரிக்க தூதரகத்தை அணுகி அமெரிக்க படையில் இணைய முடியுமா என்று கேட்டார். வாய்ப்பில்லை என்ற பதில் கிடைத்ததால், உக்ரைனில் விண்வெளி அறிவியல் படிப்பில் சேர விண்ணப்பித்து அங்கு சென்றார். பல்கலைக்கழக ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்தார். அவரது படிப்பு ஜூலையில் முடிகிறது.

சைனிகேஷ் மீது எந்தப் புகாரும் கிடையாது. அவர் எல்லோருடனும் நார்மல் ஆகத்தான் பழகி வந்தார். யாருடனும் எந்தப் பிரச்சினையும் செய்ததில்லை. அமைதியாக இருப்பார். தான் உண்டு தனது வேலையுண்டு என்று இருப்பார். ராணுவம் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். ஒரு வீரராக வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்து வந்தார்.

கடைசியாக 2021ம் ஆண்டு ஜூலை மாதம் கோவைக்கு வந்திருந்தார். ஒன்றரை மாதம் தங்கியிருந்தார். பிறகு உக்ரைன் போய் விட்டார். அவ்வப்போது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வார் என்று அவர்கள் கூறினர்.

உக்ரைனில் போர் வெடித்ததும் நான்கு நாட்களுக்கு குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை சைனிகேஷ். இந்த நிலையில்தான் அவர் ராணுவத்தில் சேர்ந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு இமெயில் அனுப்பியுள்ளனர். முதலில் இந்திய தூதரகம் பதிலளிக்கவில்லை. பின்னர் சைனிகேஷ் குறித்த தகவல்களை அவர்கள் கேட்டுள்ளனர். அதன் பின்னர் சைனிகேஷே தனது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டுள்ளார்.

நான் பாதுகாப்பாக இருக்கிறேன். பாரா மிலிட்டரி படையில் சேர்ந்துள்ளேன். அதில் தொடர விரும்புகிறேன் என்று மட்டும் கூறியுள்ளார். அதன் பின்னர் அவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையாம்.

சைனிகேஷின் முடிவால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து அவரது தந்தை ரவிச்சந்திரன் கூறுகையில், நாங்கள் பெரும் துயரத்தில் உள்ளோம். எனது மகன் குறித்து எந்தக் கேள்வியும் கேட்காதீர்கள் என்று வேதனையுடன் கூறினார். சைனிகேஷின் தாயார் ஜான்சி லட்சுமி , இல்லத்தரசி ஆவார். சைனிகேஷுக்கு 17 வயதில் ஒரு தம்பி உள்ளார். அவர் பிளஸ்டூ படித்து வருகிறார்.

மத்திய, மாநில அரசு அதிகாரிகளை சந்தித்து தங்களது மகனை திரும்ப அழைத்து வருவது தொடர்பாக கோரிக்கை வைக்கவுள்ளனராம் சைனிகேஷின் பெற்றோர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.