பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தி வைப்பு| Dinamalar

டில்லி:பெட்ரோல் டீசல் விலை உயர்வை சில நாட்கள் நிறுத்தி வைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

உ.பி. பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலையொட்டி பெட்ரோல் டீசலுக்கு தினமும் விலை நிர்ணயிப்பதை கடந்த நான்கு மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. இந்த நான்கு மாத காலத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 81 டாலரில் இருந்து 140 டாலராக உயர்ந்து விட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் உ.பி.யில் இறுதிக் கட்ட வாக்குப் பதிவுடன் ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிவடைந்தது.

இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்தியன் ஆயில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் உயரதிகாரிகள் மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். இதையடுத்து அடுத்த சில தினங்களுக்கு சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கத்தை மதிப்பீடு செய்த பின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை அறிவிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.