அரியலூர் – கைகாட்டி விலக்கில் பேருந்துகள் நின்று செல்லக் கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே பேருந்துகள் நிறுத்தத்தில் நின்று செல்லக் கோரி பள்ளி மாணவர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வி.கைகாட்டி அருகேயுள்ள பெரியநாகலூர், சின்னநாகலூர், புள்ளிகுளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள், அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள மாதிரி பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள் தினமும் பெரியநாகலூர் பேருந்து நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், பெரியநாகலூர் பேருந்து நிறுத்தத்தில் இன்று மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல எந்த அரசு பேருந்துகளும் நிற்கவில்லை எனக்கூறி மாணவர்கள், அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், பெரியநாகலூர் செல்லும் பிரிவு பாதை பேருந்து நிறுத்தமே இல்லை என கூறுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கயர்லாபாத் போலீஸார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கூறி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பள்ளி மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பெரியநாகலூர் பேருந்து நிறுத்தம் முன்பு வி.கைகாட்டி-அரியலூர் சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.