Russia-Ukraine crisis Live: உக்ரைன் அரசை கவிழ்க்க நினைக்கவில்லை : பேச்சுவார்த்தையை தான் விரும்புகிறோம் – ரஷ்யா அரசு

ரஷ்யாவில் இருந்து எரிபொருள் மற்றும் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

விற்பனையை நிறுத்திய பிரபல நிறுவனங்கள்

மெக்டோனல்டு, ஸ்டார்பக்ஸ், கொக்கக் கோலா ஆகிய நிறுவனங்கள் ரஷ்யாவில் விற்பனையை நிறுத்திவிட்டன.

ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சுற்றுலா அமைப்பு

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் அமைப்பில் இருந்து ரஷ்யாவின் உறுப்பினர் பதவியை நீக்க ஐ.நா.வின் சுற்றுலா அமைப்பு முடிவு செய்துள்ளது. விரைவில் இதுதொடர்பான வாக்கெடுப்பை அந்த அமைப்பு நடத்தவுள்ளது.

சுமி நகரில் இருந்து மாணவர்கள் மீட்பு

உக்ரைனின் சுமி நகரில் குடிநீர், உணவு, மின்சாரம் இன்று தவித்து வந்த இந்திய மாணவர்கள் 600-க்கும் மேற்பட்டோரை இந்தியத் தூதரகக் குழு பேருந்துகள் மூலம் அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றியது. இதனால் பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர். மாணவர்கள் விரைவில் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

மனநல ஆலோசனை மையம்

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம் சென்னை, டி.எம்.எஸ் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைக்கிறார்.

Live Updates
18:29 (IST) 9 Mar 2022
மனிதப் பேரழிவைத் தவிர்க்க, விமானம் பறக்க தடைசெய்யப்ப்பட்ட பகுதி அவசியம் – உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை தனது நாட்டைப் பாதுகாக்க விமானப் பயணத் தடை பகுதிக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், ஒரு பெரிய மனிதப் பேரழிவிற்கு சர்வதேச சமூகம் பொறுப்பாகும் என்று கூறினார்.

தொலைக்காட்சியில் பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனில் அச்சுறுத்தல்நிலை ரஷ்யாவின் படையெடுப்பில் அதிகபட்சமாக இரண்டு வாரங்கள் இருந்தது. ஆனால், உக்ரைனியர்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள் என்று காட்டியுள்ளார்கள்.

“எங்களுக்கு எதிராக, குடிமக்களுக்கு எதிராக, நமது நகரங்களுக்கு எதிராக, நமது உள்கட்டமைப்புக்கு எதிராக ரஷ்யா ஏவுகணைகள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்துகிறது. பதிலளிப்பது உலகின் மனிதாபிமான கடமை” என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

18:28 (IST) 9 Mar 2022
மணல் தடுப்புகளுக்கு முன்னால் ‘டோன்ட் வொர்ரி பி ஹேப்பி’ இசைத்த உக்ரைன் ராணுவ இசைக்குழு

ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனியர்கள் தங்கள் நாட்டைப் பாதுகாக்க முயற்சிக்கையில், எல்லா குழப்பங்களுக்கும் மத்தியில் சில ஆறுதலை வழங்க இசை ஒரு பெரிய பங்கு வகித்துள்ளது. இப்போது, ஒடெசாவின் ஓபரா மற்றும் பாலே தியேட்டருக்கு வெளியே ஒரு உக்ரைன் இராணுவ இசைக்குழுவின் வீடியோ வைரலாகி வருகிறது.

மத்திய ஒடெசாவில் உள்ள புகழ்பெற்ற ஓபரா தியேட்டருக்கு அருகே மணல் மூட்டைகளால் ஆன தடுப்புக்கு முன்னால் பாபி மெக்ஃபெரின் ‘டோன்ட் வொர்ரி பி ஹேப்பி’ என்ற புகழ்பெற்ற துணுக்கை வாசித்து, ராணுவ வீரர்கள் உற்சாகமாக இருக்க முயன்றனர். இந்த நிகழ்ச்சியின் வீடியோ பலரின் எதிர்ப்பை மீறிய செயல் எனப் பெயரிட்டு, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

17:15 (IST) 9 Mar 2022
உக்ரைன் அரசை கவிழ்க்க முயற்சிக்காமல் பேச்சுவார்த்தை மூலம் இலக்குகளை அடைய ரஷ்யா விருப்பம்

உக்ரைனின் இயல்பு நிலையை உறுதி செய்யும் இலக்கை ரஷ்யா அடையும், பேச்சுவார்த்தை மூலம் அதைச் செய்ய விரும்புவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா புதன்கிழமை தெரிவித்தார். கீவ் அரசாங்கத்தை கவிழ்ப்பது மாஸ்கோவின் நோக்கம் இல்லை. உக்ரைனுடனான அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் மேலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடியும் என்று ரஷ்யா நம்புகிறது என்று ஜகரோவா கூறினார். ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை அதன் திட்டத்திற்கு இணங்க கண்டிப்பாக செல்கிறது என ஜகரோவா கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

16:49 (IST) 9 Mar 2022
ரயில் மூலமாக லிவீவ் பகுதிக்கு செல்லும் இந்தியர்கள்

உக்ரைனில் மனிதாபிமான வழித்தடத்தின் மூலம் வெளியேற்றப்பட்ட 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ரயில் மூலமாக லிவீவ் பகுதி நோக்கி பயணம் செய்கின்றனர். இன்று இரவு அல்லது நாளை காலை எல்லைப் பகுதியை கடந்த பின்னர், விமானத்தின் மூலம் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்

16:31 (IST) 9 Mar 2022
உக்ரைனுக்கு சிறப்பு ராணுவ உபகரணங்கள் – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

உக்ரைனுக்கு சிறப்பு ராணுவ உபகரணங்கள் வழங்கப்படும் என அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியிடம் தெரிவித்தேன். ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்தும் செலன்ஸ்கியிடம் ஆலோசித்தேன். மேலும், கனடா பாராளுமன்றத்தில் உரையாற்ற உக்ரைன் அதிபருக்கு அழைப்பு விடுத்தேன் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்,

16:22 (IST) 9 Mar 2022
உக்ரைனுக்கு 1.4 பில்லியன் டாலர் அவசர உதவி -IMF ஒப்புதல்

சர்வதேச நாணய நிதியம் (IMF) உக்ரைனுக்கு 1.4 பில்லியன் டாலர் அவசர உதவிக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கைரிலோ ஷெவ்செங்கோ தெரிவித்தார்.

16:09 (IST) 9 Mar 2022
KFC, பீட்சா ஹட் சேவை ரஷ்யாவில் நிறுத்தம்

KFC, பீட்சா ஹட் நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, மெக்டொனால்டு, கோக கோலா, பெப்சி, ஸ்டார்பக்ஸ் நிறுவனங்கள் ரஷ்யாவில் சேவையை நிறுத்தியுள்ளன.

15:31 (IST) 9 Mar 2022
30 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளனுக்கு ஜாமீன்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்கப்படுகிறது ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் ஆஜராக வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

15:12 (IST) 9 Mar 2022
ரஷ்ய ராணுவ தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு

கிழக்கு உக்ரைன் நகரமான செவெரோடோனெஸ்ட்கில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரியை கூறியதை சுட்டிக்காட்டி AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

15:03 (IST) 9 Mar 2022
பொதுமக்களை வெளியேற்ற உக்ரைன் புதிய முயற்சி!

தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் உட்பட ஆறு “மனிதாபிமான வழித்தடங்கள்” மூலம் புதன்கிழமை பொதுமக்களை வெளியேற்ற உக்ரைன் முயற்சிக்கிறது என்று துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறினார்.

15:00 (IST) 9 Mar 2022
சுமி பகுதியிலிருந்து வெளியேறும் உக்ரேனியர்கள்!

தொடர்ந்து இரண்டாவது நாளாக “மனிதாபிமான வழித்தடம்” நிறுவப்பட்ட பின்னர், வடகிழக்கு உக்ரேனிய நகரமான சுமியிலிருந்து பொதுமக்கள் தனியார் கார்களில் புதன்கிழமை வெளியேறத் தொடங்கினர் என்று சுமி மேயர் ஒலெக்சாண்டர் லைசென்கோ தொலைக்காட்சி கருத்துக்களில் கூறினார்.

14:22 (IST) 9 Mar 2022
இபிஎஸ் வலியுறுத்தல்!

உக்ரைனில் மருத்துவபடிப்பு தொடர முடியாத மாணவர்கள் தமிழகத்திலேயே படிப்புகளை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

14:21 (IST) 9 Mar 2022
சீமான் வலியுறுத்தல்!

உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர அனுமதிப்பதோடு, அவர்களின் கல்விக் கடனையும் ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டுமென’ நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

14:21 (IST) 9 Mar 2022
ரஷ்ய படைகள் மீண்டும் குண்டுவீசி தாக்குதல்!

உக்ரைனின் செவேரோடொனஸ்ட்க் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட 3 நகரங்கள் மீது ரஷ்ய படைகள் மீண்டும் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருவதால், மக்கள் பதுங்குகுழிகளில் பாதுகாப்பாக இருக்க உக்ரைன் அரசு அறிவுறுத்தியுள்ளது.

13:33 (IST) 9 Mar 2022
அமெரிக்காவில் பெட்ரோல் விலை உயர்வு!

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ள நிலையில்’ அமெரிக்காவில் 14 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஒரு கேலன் பெட்ரோல் விலை 4.173 டாலர்களாக அதிகரித்துள்ளது.

13:33 (IST) 9 Mar 2022
உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை!

உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து டெல்லி வரும் மாணவர்கள் சென்னை அழைத்து வரப்படுகிறார்கள், இதுவரை 1,456 மாணவர்கள் உக்ரைனில் இருந்து தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என மா.சுப்பிரமணியமன் தெரிவித்துள்ளார்.

13:22 (IST) 9 Mar 2022
உக்ரைனில் என்ன நடக்கிறது?

ரஷ்ய விமானம் செவ்வாய் இரவு உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மற்றும் கிவ்-ன் மேற்கில் உள்ள சைட்டோமைரைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் குண்டுவீசித் தாக்கியது, மேலும் அதன் இராணுவமும் கிவ்-ன் புறநகர்ப் பகுதிகள் மீது ஷெல் தாக்குதலை முடுக்கிவிட்டதாக உக்ரேனிய அவசர சேவைகள் தெரிவித்தன.

சைட்டோமைர் அருகே 25,000 பேர் வசிக்கும் நகரமான மாலினில் நிகழ்ந்த, குண்டுவெடிப்பில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். கார்கிவ் அருகே உள்ள சுஹூவில் குண்டுவெடிப்பில் 7 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர். பல புறநகர்ப் பகுதிகளில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது.

2,00,000-க்கும் அதிகமான மக்களுக்கு உணவளிப்பதற்கும், தங்குவதற்கும், மேற்கு உக்ரைனில் உள்ள நகரம்’ சிரமப்படுவதாக லிவிவ் மேயர் கூறினார். இடம்பெயர்ந்தவர்கள் நகரின் விளையாட்டு அரங்குகள், பள்ளிகள் மற்றும் பிற கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் படையெடுப்பைத் தொடங்கிய சுமார் இரண்டு வாரங்களில், அவரது படைகள் தெற்கு மற்றும் கடலோர உக்ரைனின் ஒரு பகுதியைக் கைப்பற்றியுள்ளன, ஆனால் கீவ் நகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் அவர்களின் முன்னேற்றங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

12:45 (IST) 9 Mar 2022
வான்வெளி தாக்குதலை துவங்கும் ரஷ்யா; மக்களுக்கு எச்சரிக்கை

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12:19 (IST) 9 Mar 2022
இன்று ஒரு நாள் ரஷ்யா போர் நிறுத்தம்

உக்ரைன் நாட்டின் முக்கிய நகரில் இருந்து அப்பாவி மக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வெளியேற வசதியாக இன்று ஒரு நாள் மட்டும் போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

12:02 (IST) 9 Mar 2022
உக்ரைன் நடிகர் பலி – ரசிகர்கள் சோகம்

ரஷ்ய படையெடுப்பினை தொடர்ந்து உக்ரைன் ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய உக்ரைன் நடிகர் பஷாலீ கீவில் நடைபெற்ற தாக்குதலில் காயம் அடைந்து உயிரிழந்தார்.

11:31 (IST) 9 Mar 2022
கல்வி தடை பெறாமல் இருக்க வேண்டும்

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வி.கே. சசிகலா பேச்சு

11:30 (IST) 9 Mar 2022
அந்நிய செலாவணி நிலவரம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 21 காசுகள் உயர்ந்து 76.79 ஆக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

10:57 (IST) 9 Mar 2022
கச்சா எண்ணெ்ய் விலை அதிகரிப்பு

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய அமெரிக்க தடை விதித்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரலுக்கு 127 டாலர் வரை அதிகரித்துள்ளது.

10:42 (IST) 9 Mar 2022
ரஷ்யாவுக்கான ஏற்றுமதியை தடை செய்தது ரோலக்ஸ்

ரோலக்ஸ் வாட்ச் நிறுவனமும் ரஷ்யாவிற்கான தனது ஏற்றுமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

10:08 (IST) 9 Mar 2022
அமெரிக்காவின் தடையால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையால் இந்தியாவுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

09:48 (IST) 9 Mar 2022
ரஷ்யாவில் 850 கிளைகள் தற்காலிகமாக மூடல்: மெக்டோனல்டு நிறுவனம் அறிவிப்பு

உக்ரைன் மீதான தாக்குதல் காரணமாக ரஷ்யாவில் உள்ள தனது 850 கிளைகளை தற்காலிகமாக மூடுவதாக மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், அந்நாட்டில் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 62,000 ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

09:44 (IST) 9 Mar 2022
போர் அநாகரிகம்: கவிஞர் வைரமுத்து

குண்டு விழாத நாடுகளிலும் ஏழைகளின் மண்பானை உடையும்; ஆயுதம் மனிதனின் நாகரிகம், போர் அநாகரிகம்; போரை நிறுத்துங்கள் புதின் என்று கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

09:42 (IST) 9 Mar 2022
‘செர்னோபில் அணுசக்தி தரவு அமைப்புகளுடன் தொடர்பு இழப்பு’

செர்னோபில் அணுமின் நிலையத்தில் சுமார் 210 தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு ஊழியர்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தொடர்ந்து பணியில் இருப்பதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) தெரிவித்துள்ளது. செர்னோபில் அணுசக்தி தரவு அமைப்புகளுடனான தொடர்பை இழந்துவிட்டதாகவும் IAEA கூறியுள்ளது.

09:08 (IST) 9 Mar 2022
உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

08:51 (IST) 9 Mar 2022
உக்ரைனுக்கு உதவ முன்வந்த போலந்து: அமெரிக்கா நிராகரிப்பு

உக்ரைனுக்கு அளிப்பதற்காக ரஷ்ய தயாரிப்பு போர் விமானத்தை ஜெர்மனியில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்துக்கு வழங்க நேட்டோ நாடான போலந்து முன்வந்தது. எனினும் அந்நாட்டின் உதவியை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

08:35 (IST) 9 Mar 2022
புதினுடன் இஸ்ரேல் பிரதமர் 2ஆவது முறையாக சந்திப்பு

ரஷ்ய அதிபர் புதினை் இஸ்ரேல் பிரதமர் 2ஆவது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் விவகாரம் குறித்து புதினுடன் பென்னட் பேசியிருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.