மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்…இந்திய அணி தோல்வி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, ஹேமில்டனில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நியூசிலந்து அணியை எதிர்கொண்டது.  டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 33 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்து அணி, அடுத்த 17 ஓவர்களில் 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பூஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

மேலும் படிக்க | 2022 ODI World Cup மகளிர் கிரிக்கெட் அணியை அறிவித்தது பிசிசிஐ

261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மந்தனா 6 ரன்கள், தீப்தி சர்மா 5 ரன்கள், கேப்டன் மிதாலி ராஜ் 31 ரன்கள் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும், கடைசி வரை போராடிய ஹர்மன் ப்ரீத் கவுர் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். 63 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 2 சிக்சர்கள், 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்தார். 46.4 ஓவர்களில் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து மார்ச் 12-ம் தேதி தனது அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.

இந்தியா அணியும், நியூசிலாந்து அணியும் இதுவரை 53 சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளன. இதில், நியூசிலாந்து 32 போட்டிகளிலும், இந்தியா 20 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை-யில் முடிந்துள்ளது.

மேலும் படிக்க | பாகிஸ்தான் வீரரின் மகளை கொஞ்சும் இந்திய வீரர்கள்! வைரலாகும் வீடியோ!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.