18 தொகுதிகளில் முன்னிலை- கோவாவில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க வாய்ப்பு

கோவா:

40 சட்டசபை தொகுதிகள் கொண்ட கோவாவில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

இங்கு பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. மேலும் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி ஆகியவை போட்டியிட்டன.

இங்கு 302 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 79 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வடக்கு கோவாவில் உள்ள 19 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை பனாஜி அல்பின் போரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், தெற்கு கோவாவில் உள்ள 21 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மார்கோ நகரில் உள்ள தாமோதர் கல்லூரியிலும் நடந்தது.

கோவாவில் மதியம் 12  மணி நிலவரப்படி பா.ஜனதா 18 இடங்களில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 11 இடங்களில் முன்னிலை வகித்தது. மற்றவர்கள் 9 இடங்களிலும் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் முதல்-மந்திரியான லட்சுமிகாந்த் பர்சேகருக்கு பா.ஜனதா சீட் கொடுக்காததால் அவர் மாண்ட்ரேம் சட்டசபை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

முன்னாள் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர் பனாஜி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் அதனாசியோ மான்செராட்டேவை எதிர்த்து போட்டியிட்டார்.

பா.ஜனதா எதிர்ப்பாளர்களான லட்சுமிகாந்த் பர்சேகர், உத்பால் பாரிக்கர் இருவருமே முன்னிலை வகித்தனர்.

கோவாவில் 40 தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சி அமைக்க 21 தொகுதிகள் தேவை. பா.ஜனதாவுக்கு தற்போது வரை 18 இடங்கள் கிடைத்துள்ளன. பா.ஜனதா ஆட்சி அமைக்க இன்னும் 3 இடங்களே தேவைப்படுகிறது. இதனால் அங்கு ஆட்சி பிடிக்க வாய்ப்பு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.