5 மாநில தேர்தல்: வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கின – பிற்பகலுக்குள் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரிய வரும்

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ள சட்டசபைத் தேர்தல் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.
மேலும் நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தீர்மானிப்பதிலும் இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் முக்கிய பங்காற்று உள்ளன.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 403 இடங்களை கொண்ட சட்டசபைக்கு பிப்ரவரி மாதம் 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. 
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இன்று இரவுக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலையில் உள்ளது.
பிற்பகலுக்குள் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரகாண்டில் 70 இடங்களை கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 14-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் 117 இடங்களை கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 20-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 66 இடங்களில் உள்ள 117 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 
கோவாவில் 40 இடங்களை கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 14-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
பா.ஜ.க. ஆளுகிற மணிப்பூரில் 60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு பிப்ரவரி 28, மார்ச் 5 என இரு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான 76 சதவீதம் வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்க தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிற அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.