5 மாநிலங்களில் 4-ல் வெற்றி என்பது பாஜகவின் நல்லாட்சிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்: ஜிகே வாசன்

சென்னை: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் 4-ல் வெற்றி என்பது, பாஜக-வின் மத்திய, மாநில அரசுகளின் நல்லாட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் 4 மாநிலங்களில் பாஜக-வின் வெற்றி பெரிதும் பாராட்டுக்குரியது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மத்திய பாஜக அரசின் மீது 4 மாநிலங்களின் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறது.

எனவே பிரதமர் நரேந்திர மோடி-க்கும், பாஜக-வின் தேசியத் தலைவர்களுக்கும் தமாகா சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.மத்திய, மாநில அரசுகளின் ஒத்த கருத்து, அதன் அடிப்படையில் மக்களுக்கு கொடுத்த வளர்ச்சித் திட்டங்கள், கரோனாவைக் கட்டுப்படுத்தி மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த நல்ல செயல்பாடு, நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக உயர்த்த உறுதியான நிலையில் செயல்படுவது ஆகியவற்றின் மூலம் வெற்றிவாகை சூடியிருக்கிறது பாஜக.

மேலும் பாஜக-வின் மீது மக்களுக்கு அகில இந்திய அளவில் நம்பிக்கை உயர்ந்திருக்கிறது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 4 ல் பாஜக-வின் வெற்றியானது மத்திய, மாநில அரசுகளின் நல்லாட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

மீண்டும் மகத்தான வெற்றிக்காகப் பாடுபட்ட பிரதமர், பாஜக-வின் அகில இந்திய தலைவர்கள், வெற்றிபெற்ற மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோருக்கு தமாகா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.