ஊசிப்புட்டான் | `துவக்கம்னு ஒன்னு இருந்தா முடிவுன்னு ஒன்னு வராமலா போயிடும்’| அத்தியாயம் – 25

எப்பொழுதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் டவர் ஜங்க்ஷன் அன்று கூடுதல் பரபரப்போடு இயங்க ஆரம்பித்திருந்தது. அந்தப் பரபரப்பு என்பது பொதுஜனங்களால் அல்லாமல் போலீஸ்காரர்களால் என்பதால், பொதுமக்கள் மத்தியில் அது இன்னும் பரபரப்பை உண்டாக்கியிருந்தது.

அந்தப் பரபரப்பிற்கான காரணம். அன்று தான் புது எஸ்ப்பியாகப் பதவியேற்றிருந்த பன்னீர்செல்வம் கன்னியாகுமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி – நாகர்கோவில் சரகத்தின் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களையும் அவர் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டி வரவழைத்திருந்தார்.

வழக்கமாகப் புது எஸ்ப்பி பதவி ஏற்கையில் அனைத்து ஆய்வாளர்களும் வந்து அவரைப் பார்த்து வாழ்த்து சொல்வார்கள் என்றாலும், ஆய்வாளர்களைச் சந்திக்க வேண்டும் என்று எஸ்ப்பியே ஓலை அனுப்பியிருந்தது அனைவரையும் பதற்றத்துக்கு உள்ளாக்கியிருந்தது. வந்திருந்த ஆய்வாளர்களில் ஒருவர் வெளிப்படையாகவே, “இந்த லிங்கம் ப்ரெபு வெங்கம்பயலுகளால தெனந்தெனம் நம்ம பொழப்பு நாறப்பொழப்பாயிட்டே போவுது. இன்னிக்கு தான் இந்தாளு சார்ஜ் எடுக்குதாரு. எடுக்குத அன்னிக்கே நமக்கு ரெவிட்டு அடிக்கக் கூப்பிட்டிருக்காரு.” என்று சலித்துக் கொண்டார்.

“ஏய் தங்கராசு எப்பப் பாத்தாலும் அவனுவ நெனப்புலயே தான் இருப்பிய நீ. ராத்திரி பொண்டாட்டிக்கூட படுத்திருக்கப்ப கூட இவனுவள தான் நெனச்சுப்ப போல” உடன் நின்றிருந்தப் போலீஸ்காரர் சொல்லிச் சிரிக்க, அவரை முறைத்துப் பார்த்தார் தங்கராசு என்கிற தங்கராஜ்.

“நீ ஏம்ல சொல்ல மாட்ட, நீ தடிக்காரங்கோன டேசன் தான. இந்த ஊருக்குள்ள இருந்து பாரு தெரியு. அவனுவளுக்குள்ள அடிபிடின்னா அவனுவளுக்குள்ள அடிய வச்சு தீத்துக்க வேண்டியதான, ஊருக்குள்ள வந்து அவனவன் வெயிட்ட காமிக்க பொதுமக்க அதிகமா கூடுற எடத்துல வச்சு ஒருத்தனுக்கொருத்த மாறி மாறி வெட்டிக்குதானுவ. செற மயிரா இருக்கு”

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே சைரன் வைத்த அம்பாஸடர் கார் எஸ்ப்பி ஆபீஸினுள் நுழைய, அங்கே தாறுமாறாய் நின்றுப் பேசிக் கொண்டிருந்த அத்தனை ஆய்வாளர்களும் சட்டெனப் பேச்சை நிறுத்திவிட்டு நிமிர்ந்து நின்றனர்.

எஸ்ப்பி பன்னீர்செல்வத்தின் கார் அவர்களைக் கடந்து செல்கையில் ஒவ்வொருவரும் விரைப்பாய் சல்யூட் அடித்தனர். எஸ்ப்பியின் கார் அலுவலகத்தின் வாசலில் போய் நிற்க, காரினுள் இருந்து முப்பது வயது மதிக்கத் தக்க உடல்வாகோடு எஸ்ப்பி சீருடையில் ஒருவர் இறங்கி அங்கே விரைப்பாய் நின்றுக் கொண்டிருந்த போலீஸ்காரர்களை ஒரு முறைத் திரும்பிப் பார்த்துவிட்டு, வேகவேகமாகப் படியேறி அலுவலகத்தினுள் சென்றார். வெளியே குழுமியிருந்த ஆய்வாளர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் ஒருவித கலக்கம் தோன்றி மறைந்தது.

“சின்னப்பயலா இருக்குதான். நம்ம எக்ஸ்பீரியன்ஸு தான் இவனுக்க வயசா இருக்கும். இவென் நம்மள கேள்வி கேட்டுச் சாவடிக்கப் போறான்னு நெனைக்கிறப்ப தான் எனக்கு அந்த வெங்கம்பயலுவ மேல இன்னும் கடுப்பு ஏறுது மாப்ளே”

என்றுப் பல்லை இறுக கடித்தபடி தங்கராஜ் இன்ஸ்பெக்டர் தன்னருகில் நின்ற தடிக்காரன்கோணம் இன்ஸ்பெக்டரான சந்திராவிடம் சொல்ல, “கேள்வி கேக்கப் போறானா இல்ல, ஐடியா ஏதும் தரப்போறானான்னு உள்ளே போய் அவனப் பாத்த அப்புறமா தான தெரியும் மாப்ள. பொறுமையா நில்லு” எனப் பதிலளித்தார் சந்திரா.

“என்ன எழவோ. இவனுவ ரெண்டு பேர்த்தால நாம இன்னும் எவ்வளவு தூரத்துக்குச் சீக்கழிஞ்சு சின்னாபின்னமாவப் போறோமோ தெரியல” என்று தங்கராஜ் நொந்துக் கொண்டார்.

“இரு மாப்ள எல்லாத்துக்கும் துவக்கம்னு ஒன்னு இருந்தா முடிவுன்னு ஒன்னு வராமலா போயிடும். வரும் மாப்ள வரும்.”

“ஆமாமா வரும். அது வரப்ப நாம எந்தக் குழுக்குள்ள பொதஞ்சி கெடப்போம்னு எவனுக்குய்யா தெரியும். ஒவ்வொரு நாளுங் காலேல எந்திரிக்கப்ப வெல்லாம் இன்னிக்கு எங்கே இவனுங்க எவனுக்கத் தாலிய அறுக்கப் போறானுவன்னே இருக்குது மாப்ள”

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே எஸ்ப்பி ஆபிஸினுள் இருந்து அழைப்பு வர, அங்கே நின்றுக் கொண்டிருந்த அனைத்து ஆய்வாளர்களும் கலக்கத்தோடு அலுவலத்தினுள் நுழைந்தார்கள்.

எஸ்ப்பி அலுவலக மீட்டிங்க் ஹாலில் போடப் பட்டிருந்த இருக்கையில் அனைவரும் சென்று அமர்ந்தபிறகு, எஸ்ப்பி பன்னீர்செல்வம் அங்கே வர, தங்கராஜ், “ஏம்மாப்ள, இவெர பாக்க எங்கேயோ பாத்த மாதிரி இருக்குதுல” அருகிலிருந்த சந்திராவின் காதைக் கடித்தார்.

“ஆமா மாப்ள எனக்கும் தான்” என்று சொல்லி யோசித்த சந்திரா, சட்டெனக் கண்டுப்பிடித்து விட்டவராக, “இப்ப கொஞ்ச நாளுக்க முன்ன ரோஜான்னு ஒரு படம் வந்ததுல அந்தப் படத்துல வர்ற ஹீரோ மாதிரி இல்ல” என்று சொல்ல, “அட ஆமாம் மாப்ள” என்று தங்கராஜின் முகமும் மலர்ந்தது.

பன்னீர்செல்வம் தொண்டையைக் கனைத்துக் கொள்ள, அனைத்து ஆய்வாளர்களும் பேசுவதை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தார்கள். “நான் பன்னீர்செல்வம், உங்க ஊருக்குப் புதுசா சார்ஜ் எடுத்திருக்கிற எஸ்ப்பி.” அந்த ஹாலினுள் அவரின் குரல் கணீரென ஒலித்தது.

எஸ்ப்பியின் குரலில் சூடேற ஆரம்பித்ததை அங்கிருந்த அத்தனை ஆய்வாளர்களாலும் உணரமுடிந்தது.

“உங்க ஊருக்குள்ள என்னங்க சார் நடக்குது…? சப் ஜெயில் வாசல்ல வச்சு ஒரு கிரிமினலு  போலீஸ்காரன் ஒருத்தனைக் குத்திக் கொன்னுருக்கான். அவனை இன்னும் நீங்க அரெஸ்ட் கூடப் பண்ணாம விட்டு வச்சிருக்கீங்க. சப்-ஜெயில் யாரோட லிமிட்ல வருது…?” என அவர் கேட்கவும், நேசமணி நகர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் எழுந்து நிற்க, “போன மாசம் சம்பளம் வாங்கிட்டீங்கள்ல” எனக் கேட்க, அந்த இன்ஸ்பெக்டர் ஆமாம் என்பதாய் தலையசைத்தார். 

“நல்லது அப்படியே உட்காருங்க” என்று எஸ்ப்பி சொல்ல, அவமானத்தோடு தன்னைச் சுற்றியிருந்த அனைத்து ஆய்வாளர்களையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அவர் அமர்ந்துக் கொண்டார்.

“பொதுஜனங்க ட்ரீட்மெண்ட் எடுத்துக்க வர்ற ஆஸ்பத்திரியில வச்சு ஒருத்தனைக் கொடூரமா வெட்டிக் கொன்னுருக்கானுங்க. ஹான் மறந்துட்டேன் அதுக்கு முன்ன ஒருத்தனை கலெக்டர் ஆபீஸ் முன்ன வச்சு நடு ரோட்டுல ஓட ஓட வெரட்டி போய் வெட்டியிருக்கிறானுங்க.”, அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே நேசமணி நகர் சரகத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் எழுந்து, “சார் ஷாகுலைக் கொன்னவங்க இப்ப பாலையங்கோட்டை” என்று சொல்ல ஆரம்பிக்க, “உங்ககிட்ட அந்தக் கேஸ் பத்தி ஏதும் கேட்டேனா சார்” முகத்திலடித்ததைப் போன்று எஸ்ப்பியிடமிருந்து பதில் கேள்வி வர, “இல்லை சார்” என்று இன்ஸ்பெக்டர் பதிலளிக்க, “ஒரு போலீஸ்காரனை நடுரோட்டுல வச்சு குத்திட்டு ஓடினவனை பிடிக்கத் துப்பில்ல, உட்காருங்க சார்” மெல்லிய குரலில் ஆனால் அனைவருக்கும் கேட்கும்படியாக அவர் சொல்ல, அந்த இன்ஸ்பெக்டரின் முகம் கறுத்தது.

“எவன் ஒருத்தனையும் நீங்க அரெஸ்ட் பண்ணின மாதிரி தெரியல, அவனுங்களே பாவம் பார்த்துச் சரண்டரான மாதிரி தான் தெரியுது. அந்த ஹாஸ்பிட்டல்ல வச்சு ஒருத்தனை வெட்டினானுங்களே, அவன் பெயரென்ன…?” எஸ்ப்பி கேட்க, “தேவராஜ் சார்” கூட்டத்திலிருந்து ஒருத்தர் பதில் கூறினார். “அந்தத் தேவராஜைக் கொன்னவனுங்கள்ல ஒருத்தன் திருச்சி கோர்ட்ல போய்ச் சரண்டராகியிருக்கான். இன்னொருத்தன் மதுரையில, இன்னொருத்தன் எங்கே தூத்துக்குடியிலயா” என்று கேட்டு அவர் அமைதி காக்க, கூட்டதிலிருந்து எந்தவொரு பதிலும் இல்லாமல் இருக்கவே, “இப்படியே வாய்க்குள்ள கொழுக்கட்டையைத் திணிச்சு வச்ச மாதிரி எப்பவுமே உக்காந்துக்கோங்க. சரியா”

குழுமியிருந்த இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் பேயடித்ததைப் போன்று அமைதியாகவே இருந்தனர்.

என பிரச்னைக்கானக் காரணம் என்ன என்பதைப் போல அவர் கேட்க, அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டர்கள் கூட்டத்திலிருந்து ஒருவர், “ப்ரபு லிங்கம்னு ரெண்டு பேரோட ஆராஜகம் தான் சார்” என்று சொல்ல, “அவங்க ரெண்டு பேரோட அராஜகம் மட்டும் தானா…” என்று மீண்டும் எஸ்ப்பி கேட்க, “ஆமாம் சார்” என்று அந்த இன்ஸ்பெக்டர் பதிலளிக்க, “உங்க கையாளாகத்தனம் எல்லாம் இல்ல அப்படி தான” என்று அவர் மீண்டும் கேட்க, பதிலளித்தவரின் முகம் கறுத்து சிறுத்தது.

“வெறும் ரெண்டு பேர்த்தோட கையில மொத்த டிஸ்ட்ரிக்ட்டும் இருக்குன்னு சொல்றீங்களே உங்களுக்கெல்லாம் வெட்கமா இல்ல”

மொத்த ஹாலுமே அமைதியாய் இருந்தது.

“ஓக்கே, பழசைப் பத்தி பேசிப் பேசி ஒண்ணும் ஆகப் போறது இல்ல. இனி என்னப் பண்றதுன்னு பேசுவோமா” என்று எஸ்ப்பி கேட்க, மொத்த இன்ஸ்பெக்டர்களும் எதுவுமே பேசாமல் மௌனமாய் இருந்து அதை ஆமோதித்தனர்.

“பழசுல இருந்து தப்பிச்சா போதும்னு முடிவு பண்ணிட்டீங்கள்ல.” என்று எஸ்ப்பி நக்கலாகச் சிரித்தபடியே கேட்டுவிட்டு, “இனி என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. இனி இந்த லா அண்ட் ஆர்டர் பிரச்சனை இங்கே வரக் கூடாது. அந்தக் கிரிமினல்கள் ரெண்டு பேரையும் ஏதாச்சும் ஒரு கேஸைப் போட்டு உள்ள வைங்க. உள்ள வச்ச அப்புறமா அவங்க வெளியே வரமுடியாத அளவுக்கு அடுத்தடுத்த கேஸைப் போட்டு உள்ளேயே வச்சிருக்கலாம்”

அப்பொழுதும் இன்ஸ்பெக்டர்கள் கூட்டம் அமைதியாய் இருக்க, “என்ன சார் அரெஸ்ட் பண்ணக் கூட உங்களால முடியாதா…?” என்று அவர் நக்கலாகக் கேட்க, கூட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக, பண்ணிடலாம் சார் என்ற குரல் கேட்டது.

“அவனுங்க ரெண்டு பேர்த்தையும் அரெஸ்ட் பண்றது விஷயமா உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் என்னை நேரடியா காண்டாக்ட் பண்ணுங்க. நான் பண்ணித்தரேன். இப்ப நீங்கக் கிளம்பலாம்” என்று சொல்லிவிட்டு அவர் எழுந்துக் கொள்ள, ஏனையோரும் அங்கிருந்து கலைய ஆரம்பித்தனர்.

கடுகடுத்த முகத்தோடு நேசமணி நகர் இன்ஸ்பெக்டரான செல்வராஜ் அவருடைய ஜீப்பில் ஏறி எஸ்ப்பி ஆபீஸிலிருந்து வெளியே வருகையில் எஸ்ப்பி ஆஃபிஸின் எதிர்புறமிருந்த சந்திரா மெடிக்கலில் ரவியும் நாகராஜனும் நிற்பதைப் பார்த்தார்.

“ஏட்டு ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்துங்க” என்று வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த ஏட்டுக்கு அவர் கட்டளையிட, ஏட்டு வண்டியை நிறுத்தினார்.

“ஆமா அந்த மெடிக்கல் வாசல்ல நிற்கிறது, அந்தத் தாலியறுப்பு கேஸு நாகராஜன் தான” என்று அவர் கேட்கவும், “ஆமாங்கய்யா அவன் தான்” என்று ஏட்டு பதிலளித்தார்.

“அவென் கூட நிற்கிறது யாருய்யா… இதுக்கு முன்ன இந்தப் பயல எங்கேயோ பார்த்த மாதிரி வேற இருக்கு”

“பாக்க ஏதோ ஸ்கூல்ல படிக்கிற பையன் மாதிரி தாங்கய்யா தெரியுது”

“ஸ்கூல்ல படிக்கிற பயலுகளை கூட வச்சிட்டு இப்ப இங்க நின்னு என்ன திட்டம் போடுஹான் இவன். அவன இங்க கூப்பிடுங்க”

டிரைவர் சீட்டிலிருந்து இறங்காமலேயே ஏட்டு நாகராஜனை அழைக்க, நாகராஜன் ரவியை அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு முன்னே வர, “அந்தப் பையனையும் கூட்டிட்டு வரச் சொல்லி, ரெண்டு பேர்த்தையும் ஜீப்ல ஏத்திட்டு டேசன் போங்க ஏட்டு” செல்வராஜிடமிருந்து கட்டளையாய் வார்த்தைகள் வெளியேற, “அந்தப் பையனையும் கூட்டிட்டு வால” என்று ஏட்டுக் கத்த, ரவியையும் அழைத்துக் கொண்டு நாகராஜன் வந்தான்.

ஜீப்பருகில் வந்து “என்ன சார்” என்று நாகராஜன் கேட்க, “ரெண்டு பேரும் ஜீப்ல ஏறுங்கல” என்று ஏட்டு கட்டளையிட, “ஏன் சார்” என்று நாகராஜன் கேட்க, “காரணத்த சொன்னா தான் வண்டியில ஏறுவியோ…? ஏறுல வண்டியில” என்று ஏட்டு கத்த, எதுவுமே பேசாமல் நாகராஜன் முதலில் ஜீப்பில் ஏறிக்கொண்டான். அவன் பின்னேயே ரவியும் சற்றுத் தயக்கதோடு ஜீப்பில் ஏறினான்.

(தொடரும்)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.