புவனேஸ்வர்,
9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்திய பெண்கள் அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வி என்று 9 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறது.
இந்த நிலையில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்திய பெண்கள் அணி அடுத்து 4-ம் நிலை அணியான ஜெர்மனியுடன் 2 முறை மோத இருக்கிறது. இதன் முதல் ஆட்டம் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.
ராணி ராம்பால் காயத்தில் இருப்பதால் இந்த ஆட்டத்தில் இந்திய அணியை சவிதா வழிநடத்துகிறார். ஸ்பெயினுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் வாங்கிய கோலால் தோல்வியை தழுவிய இந்தியா, அந்த தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் கவனம் செலுத்துகிறது.
அத்துடன் கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் 0-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்க்க முயற்சிக்கும். வலுவான அணிகளில் ஒன்றான ஜெர்மனி, பெல்ஜியத்துக்கு எதிரான இரண்டு ஆட்டங்களிலும் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது.
எனவே வெற்றிக்கணக்கை தொடங்க அந்த அணி வரிந்து கட்டும் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.