உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்பு- மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

சென்னை:

த.மா.கா. தலைவர்
ஜி.கே.வாசன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உக்ரைனில் போர் நடைபெற்று வந்த நேரத்தில் அங்கிருந்த இந்தியர்களை மீட்டு தாயகம் கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் முழுமையாக பயனளித்தது.

குறிப்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உக்ரைன் நாட்டோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து இந்திய மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்தது பாராட்டுக்குரியது.

மேலும் உக்ரைனில் இருந்த இந்தியர்களுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கியதும், அந்நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு ஏற்பாடு செய்ததும், அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு மீட்டு வந்ததும் சவாலான பணி என்றாலும் அதனை வெற்றிகரமாக செய்து முடித்தது மத்திய அரசு.

உக்ரைனில் இருந்த தமிழகம் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்தவர்களை தாய்நாட்டிற்கு பத்திரமாக மீட்பதற்காக மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளும், நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது.

மேலும் பிரதமர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் இந்திய தூதரகம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தனிக்கவனம் செலுத்தியதற்கு த.மா.கா சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.