உத்தரகாண்ட் புதிய முதல்வர் யார்?- மூத்த தலைவர்கள் கடும் போட்டி

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்ததால் முதல்வர் பதவியை கைபற்ற பாஜக மூத்த தலைவர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.

உத்தரகண்டில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில், பாஜக 47ல் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. எனினும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தான் போட்டியிட்ட காதிமா தொகுதியில் தோல்வியடைந்தார்.

3 முதல்வர்கள்
கடந்தாண்டு மார்ச்சில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மாற்றப்பட்டு தீர்த்த சிங் ராவத் முதல்வரானார். கடந்தாண்டு ஜூலையில் அவரும் மாற்றப்பட்டு, தாமி முதல்வராக நியமிக்கப்பட்டார். தற்போது தாமி தோல்வியடைந்துள்ளதால் முதல்வர் பதவிக்கு பல மூத்த தலைவர்களும் போட்டியிடுகின்றனர்.

சத்பால் மகராஜ், தன் சிங் ராவத், முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பிஷன் சிங் சுபால், முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், மத்திய அமைச்சர் அஜய் , அனில் பலுனி உள்ளிட்டோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

முதல்வர் தாமி தோல்வியடைந்தாலும் அவரையே முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். எனினும் உத்தரகாண்ட் மாநில முதல்வர் யார் என்ற விஷயத்தில் பாஜக தலைமை இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.