கல் எறிந்து மதுபான கடையை சேதப்படுத்திய உமாபாரதி – போபாலில் பரபரப்பு

போபால்:
முதலமைச்சர் சிவராஜ் சிங் தலைமையிலான மத்திய பிரதேச அரசு வெளிநாட்டு மதுபானங்கள் மீதான கலால் வரியை 13 சதவீதம் வரை குறைத்துள்ளது. 
வெளிநாட்டு மற்றும் நாட்டு மதுபானங்களை ஒன்றாக விற்பனை செய்ய மதுபான கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த ​​மாநிலத்தில் 2,544 நாட்டு மதுபானக் கடைகளும், 1,061 வெளிநாட்டு மதுபானக் கடைகளும் உள்ளன.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் மதுவிலக்கு கோரி பாஜக தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சருமான உமாபாரதி போராட்டத்தை அறிவித்திருந்தார். மதுக்கடைகளுக்கு வெளியே போராட்டம் நடத்தப் போவதாக அவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து இன்று போபாலில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குள் சென்ற உமாபாரதி, பெரிய கல் ஒன்ற வீசி அங்கிருந்த மதுபான பாட்டில்களை சேதப்படுத்தினார். இது குறித்த வீடியோயை தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்து கொண்டார்.
பர்கேடா பதானி பகுதியில் உள்ள தொழிலாளர்கள் காலனியில் ஏராளமான மதுபானக் கடைகள் உள்ளன. மது விற்பனையால் கூலித் தொழிலாளர்களின் பணம் வீணாகிறது. 
அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக இந்த மதுபானக்கடை இருப்பதால் அப்பகுதிவாசிகள் மற்றும் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பலமுறை கடையை மூடுவதாக நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் நடக்கவில்லை. 
ஒரு வாரத்திற்குள் மதுக்கடையை மூட வேண்டும் என்று உள்ளாட்சி நிர்வாகத்தை எச்சரித்துள்ளேன். இவ்வாறு தமது ட்விட்டர் பதிவில் உமா பாரதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.