முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சோதனை: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை- ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கண்டனம்

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களுக்குத் தொண்டாற்றுவதிலும், அரசியல் பணிகளிலும், அ.தி.மு.க.வின் அர்ப்பணிப்புக்கும், உழைப்புக்கும் முன் நிற்க இயலாத தி.மு.க. அரசு, தனது தோல்விகளை மறைக்க, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது மீண்டும் மீண்டும் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஏவிவிட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தோடு லஞ்ச ஒழிப்பு சோதனை என்ற பெயரில் களங்கத்தை அள்ளி வீசும் கண்ணியக் குறைவான நடவடிக்கையில் தி.மு.க. அரசு இறங்கியது.

மீண்டும் வேலுமணியை குறிவைத்தும், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் உள்ளிட்டோரைக் குறிவைத்தும் பழிவாங்கும் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டிருக்கிறது. இந்த முறையற்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தி.மு.க. அரசின் உள்நோக்கத்தை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் வேலுமணி துடிப்புடன் செயல்பட்டு கழகப் பணிகள் ஆற்றியதை பொறுத்துக்கொள்ள இயலாமல் தற்போது அவர்மீது குறிவைத்துத் தாக்கப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிமன்றத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்களில் தி.மு.க.வினரின் ஆள்தூக்கி நடவடிக்கைகளையும், முறைகேடுகளையும், வீரத்துடன் எதிர்த்துப் போராடிய வேலுமணியை முடக்கிப் போடவே அவர் மீதும், அவர் தொடர்புடைய இடங்களிலும் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைகள் நடத்தப்படுகின்றது என்பதை அரசியல் தெரிந்த அனைவரும் நன்கு அறிவார்கள்.

வேலுமணி ஆயிரம் சோதனைகள் வந்தபோதும், அதனை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர். அ.தி.மு.க.வின் உறுதி மிக்க தொண்டர்களில் ஒருவரான வேலுமணி தி.மு.க. அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளால் சிறிதும் தொய்வடைந்து விடமாட்டார்.

அவருடைய கழகப் பணிகளும், மக்கள் தொண்டும் தொய்வில்லாமல் தொடரும் என்பதை அ.தி.மு.க. தொண்டர்களும், கோவை மாவட்ட மக்களும் நன்கு அறிவார்கள். தி.மு.க. அரசின் தீய முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து, சோதனைகள் அனைத்தையும் வென்று, தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக அ.தி.மு.க. விளங்குகிறது. இனியும் விளங்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.