ஹிஜாப் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அத்துடன், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே, மாணவர்கள் உரிய பள்ளி சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்று கர்நாடக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இது தொடர்பாக அரசாணையையும் அம்மாநில பாஜக அரசு பிறப்பிதத்து.

இதற்கு பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஹிஜாபுக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, ஹிஜாப்புக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும் என அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளையும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கர்நாடக பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை செல்லும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 6 மாணவிகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.