தலைவர் பதவியில் இல்லாத ராகுல் முதல்வர் வேட்பாளரை எப்படி அறிவித்தார்?- கபில்சிபல் கேள்விக்கு மூத்த தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி:

உத்தரபிரதேசம் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் கூறிய நிலையில் கபில் சிபல் இந்த கருத்தை முன் வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்து காந்தி குடும்பம் தாமாக முன்வந்து விலக வேண்டும். ஏனெனில் அவர்களால் நியமிக்கப்பட்ட ஓர் அமைப்பு அவர்கள் பதவி விலக வேண்டும்மென ஒரு போதும் கூறாது.

சட்டப் பேரவைத் தேர்தல் தோல்வியாலோ அல்லது செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி மீது மீண்டும் நம்பிக்கை வைத்ததாலோ நான் வியப்படையவில்லை. செயற்குழுவையும் தாண்டி ஒரு காங்கிரஸ் உள்ளது. அவர்களின் கருத்தையும் கேட்டறிய வேண்டும்.

எங்களைப் போன்ற செயற்குழுவில் இடம் பெறாத காங்கிரஸ் தலைவர்கள், முற்றிலும் வேறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளோம். செயற்குழுவில் நாங்கள் அங்கம் வகிக்கவில்லை என்பதற்காக எங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடாது என்று அர்த்தமா?

ராகுல் காந்தி தற்போது காங்கிரஸ் தலைவர் இல்லை என நாம் கருதுகிறோம். ஆனால் அவர் தேர்தலின்போது பஞ்சாப் சென்று காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை அறிவித்தார். எந்த அடிப்படையில் அவர் இவ்வாறு அறிவித்தார்? கட்சியின் தலைவராக இல்லாத போதிலும் முடிவுகள் அனைத்தையும் அவர்தான் எடுக்கிறார்.

கட்சி விதிகளின்படி அவர் தலைவராக இல்லையென்றாலும், நடைமுறையில் அவர்தான் மறைமுகமாக கட்சித் தலைவராக செயல்படுகிறார். அப்படி இருக்கும்போது, கட்சியின் தலைமையை மீண்டும் அவர் ஏற்குமாறு ஏன் கேட்கிறார்கள்? கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து காந்தி குடும்பம் விலகி, பிறருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

கிரிக்கெட்டில் இருந்து சுனில் கவாஸ்கரும், சச்சின் தெண்டுல்கரும் ஒருநாள் ஓய்வுபெற நேர்ந்தது. நேற்று வரை விராட் கோலி கேப்டனாக இருந்தார். கிரிக்கெட் வரலாற்றில் இந்த 3 பேரின் பெயர்களும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்.

அதேபோல அதிக திறமை வாய்ந்தவர்களும், ஒரு கட்டத்தில், பொறுப்புகளில் இருந்து விலகுவதைக் குறித்து சிந்திக்க வேண்டும்.

தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே தவிர நியமிக்கப்படக் கூடாது. அவர்களை செயல்பட அனுமதிக்க வேண்டும்

‘யாராவது ஒரு குறிப்பிட்ட நபர் கட்சியில் இல்லாவிட்டால் கட்சியே இருக்காது என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், காங்கிரஸ் அனைவருக்குமான கட்சியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், அது ஒரு குடும்பத்தின் கட்சியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர்.

இவ்வாறு கபில்சிபல் கூறியுள்ளார்.

அவரது இந்தக் கருத்து காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கபில் சிபலுக்கு கண்டனம் தெரிவித்து, மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் டுவிட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்து நேரு காந்தி விலக வேண்டுமென பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். விரும்பியது ஏன்? காரணம், காந்தியின் தலைமையில்லை என்றால் காங்கிரஸ், ஜனதா கட்சியாகிவிடும். அப்போது காங்கிரஸையும், இந்திய சிந்தனையையும் அழிப்பது எளிது.

கபில் சிபலுக்கு இது நன்றாகவே தெரியும். ஆனாலும், ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க, தொனியில் அவர் பேசுவது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் கபில் சிபல் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறிப்பு ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்து வரும் இந்த வேளையில், தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் நூற்றாண்டைக் கடந்த கட்சி. சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் நமது தலைவர்கள் உயர்ந்த தியாகங்களை செய்துள்ளனர்’’ என்றார்.

இதனிடையே, பாராளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் கபில் சிபல் கூறிய கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.