156 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டு விசா, இ-விசா சேவை மீண்டும் ஆரம்பம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: `156 நாடுகளுக்கு வழங்கிய 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் இ-விசா சேவைகளை மீண்டும் தொடங்குவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் 156 நாடுகளுக்கு வழங்கி வந்த 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் இ-விசாவை கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒன்றிய அரசு ரத்து செய்தது. இந்நிலையில், தொற்று பரவல் கட்டுக்குள் வந்திருப்பதால், இந்தியாவுக்கு வருகை தரும் 156 நாடுகளின் குடிமக்களுக்கு விசா விதிமுறைகள் 2019ன்படி வழங்கப்பட்டு வந்த இ-விசா மீண்டும் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதே போல், கடந்த 2020 மார்ச் முதல் ரத்து செய்யப்பட்டிருந்த, அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் வழக்கமான பேப்பர் விசாக்களும் மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கர்கள், ஜப்பானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 ஆண்டு கால விசாவும் மீண்டும் வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.