சென்னை அடுத்த ஆவடியில் வசிக்கும் குருவிக்கார இன மக்களுடன் வீடியோ காலில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்.
தங்களது கல்விக்கும், தங்களது குடியிருப்பு பகுதிக்கும் உதவி கிடைக்க வேண்டி ஆவடியைச் சேர்ந்த குருவிக்கார இனத்தைச் சேர்ந்த மாணவிகள் பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகியோர் பேசியிருந்த வீடியோ வெளியாகி வைரலானது. பள்ளியில் பயிலும் குருவிக்கார இன மாணவிகளின் இன்னல்களை சுட்டிக்காட்டி, அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசியிருந்தனர்.
இந்த நிலையில், மாணவிகள் மூவரையும் நேற்று நேரில் அழைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அவர்களோடு வீடியோ காலில் கலந்துரையாடினார். பால்வளத்துறை அமைச்சர் நாசர் மூலம், குருவிக்கார இன மாணவிகள், மக்களிடம் பேசிய முதலமைச்சர், அவர்களை நலம் விசாரித்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும், ஒரு வாரத்தில் நேரில் வந்து அனைவரையும் சந்திப்பதாகவும் உறுதியளித்தார்.