புதுச்சேரி: 53 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி சிறை விதிகள் திருத்தப்பட்டு போலீஸாருக்கு இணையான ஊதியம், பதவி உயர்வு தரப்படுகிறது. அதேபோல் கைதிகளுக்கு உணவு, உடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி புதுவை சிறைத்துறை ஐஜி ரவிதீப்சிங்சாகர் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “புதுவை சிறை விதிகள் 1969-ல் உருவாக்கப்பட்டன. கடந்த 2016-ல் மத்திய அரசு இதில் மாதிரி சட்டவரையறை செய்தது. அதன்படி மாநிலங்கள் தங்கள் விதிகளைத் திருத்த அனுமதி தந்தது. 53 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விதிகளை திருத்தி அமைத்துள்ளோம். ஆளுநர் இதற்கு அனுமதி தந்துள்ளதால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 14 ஆண்டுகள் கழித்து ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர், தற்போது 10 ஆண்டு முடிந்து நன்னடத்தை கைதிகளை விடுவிக்கப்படுவர். இது அனைத்து வழக்குகளுக்கும் பொருந்தாது. போக்சோ உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்.
அரை நூற்றாண்டு காலமாக சிறை அதிகாரிகள், காவலர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே சம்பளம், பதவி உயர்வு வேறுபாடு இருந்தது. தற்போது போலீஸாருக்கு இணையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சிறைத்துறையில் பணியாற்றுவோரின் பணி நேரம் 8 மணி நேரமாக மாற்றப்பட்டு 3 ஷிஃப்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை கைதிகளுக்கு டிராயர் தரப்பட்டது. இனி பேன்ட் தரப்படும். கைதிகளுக்கு தற்போது விளையாட்டு பயிற்சிகள் தரப்படுகிறது. அதில் சிறந்தோர் தேசிய போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யவுள்ளோம். கைதிகளுக்கு புதுவையில் காலையில் கோதுமை தோசையும், காரைக்காலில் கஞ்சியும் வழங்கப்பட்டு வந்தது. இதை மாற்றி காலையில் இட்லி, உப்புமா, பொங்கல் வழங்கப்படும். புதன்கிழமை முட்டையும், ஞாயிறு சிக்கனும் தரப்படும். மதியம் சாதம், பொறியல், சாம்பார் தரப்படும். 6 மாத தண்டனைக்கு பின் வெளிநாட்டு கைதிகள் அவர்கள் நாட்டுச் சிறைக்கு மாற்றப்படுவர். கைதிகள் கால்நடை வளர்ப்பு, விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். சுய தொழில் பயிற்சி தரப்படும். அவர்கள் விடுதலைக்கு பிறகு தொழில்தொடங்க கடனுதவி ஏற்பாடு செய்து தரப்படும்” என்று தெரிவித்தார்.