நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் பல்வேறு மாநிலங்களில் மறியல், பேரணி

திருவனந்தபுரம்: ஒன்றிய அரசைக் கண்டித்து நடந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.  பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 2 நாள் வேலை நிறுத்தம் போராட்டம் நேற்று தொடங்கியது. இந்த போராட்டத்தில் பாஜகவின் பிஎம்எஸ் தவிர சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி உள்பட அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டன. கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் போராட்டம் தீவிரமாக இருந்தது. கேரளாவில் அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோ, டாக்சிகள், லாரிகள் உள்பட எந்த வாகனங்களும் ஓடவில்லை. ஓட்டல்கள், கடைகள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் கண்டனப் பேரணி நடத்தினர். கொல்கத்தாவிலும் பல இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகள் அனைத்து மூடப்பட்டு இருந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  இதேபோல், அசாம், அரியானா, டெல்லி, மேற்கு வங்கம், தெலங்கானா, கர்நாடகா, பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், கோவா, ஆந்திர பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.