வருமுன் காக்க | காலமுறைப்படி மருத்துவ பரிசோதனை அவசியம் | முதுமை எனும் பூங்காற்று

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’, ‘நோய் வராமல் தடுப்பதே, நோய் வந்தபின் அதற்கு சிகிச்சை அளிப்பதைவிட சிறந்தது’, என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் அதனை எத்துனை பேர் நடைமுறையில் கடைப்பிடிக்கிறார்கள் என்றால், அதற்கு பதில் மிகக் குறைவானவர்களே என்று தான் வரும்.

நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழவேண்டும். பேரன் பேத்தி திருமணத்தை எல்லாம் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் உண்டு. ஆனால் அதற்காக – நல்ல உடல் நலத்திற்காக – எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். கண்கெட்ட பின்பு தான் சூரிய நமஸ்காரம் என்று ஆகிவிட்டது. நம் உடலில் உள்ள ஒரு உறுப்பு பழதடையும் பொழுது தான் அதன் அவசியம் தெரிய வருகிறது. பல் வலி வந்த பின்பு தான் அவசர அவசரமாக பல் மருத்துவரை நாடுகிறோம். நெஞ்சில் தாங்க முடியாத தொல்லை வந்த பின்பு தான் இருதய மருத்துவரிடம் செல்கிறோம். இதையெல்லாம் தவிர்த்து, நம் உடல்நலத்தை நன்றாக வைத்துக் கொள்ள முடியாதா? முடியும். ஆனால் அதற்கு நம் மனம் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்கென்று இந்த அவசர காலத்தில் சிறிது நேரத்தையும் ஒதுக்க வேண்டும். அதற்குத்தான் நேரமே இல்லையே. தினமும் அவசரம் அவசரம் என்று எதையோ சாதிப்பதாக நினைத்து, உடலையும் மனதையும் கெடுத்துக் கொண்டு, பணம் சம்பாதிப்பது ஒன்று மட்டுமே குறிக்கோள் என்று அல்லவா நமது சமுதாயம் அலைந்து கொண்டு இருக்கிறது. அந்த குறிக்கோளை (அனேகமாக பணத்தை நோக்கித்தான்) அடைவதற்கு, உடல்நலம் மற்றும் குடும்ப நலமும் அடகு வைக்கப்படுகிறது. இறுதியில் உடல்நலம் கெட்டு, எடுத்த காரியத்தையும் நிறைவேற்றாமல் குடும்பத்தாருக்கு ஒரு சுமையாக வாழ்க்கை முடிந்து விடுகிறது.

Health

தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, குளிர்சாதன கருவிகள் மற்றும் கார் என எந்தப் பொருளை வாங்கினாலும் அதற்கு இலவச பராமரிப்பு எது வரை என்று தெரிந்து கொள்ள எவ்வளவு ஆவலாக இருக்கிறோம். அது முடிந்ததும் தொடர்ந்து பாராமரிப்பு ஒப்பந்தமும் போட்டுக் கொள்கிறோம். நம் தேவைக்காக உழைக்கும் இந்த இந்திரங்கள் மீதுதான் நமக்கு எவ்வளவு அக்கறை !

இந்த இயந்திரங்களின் ஆயுள் சில ஆண்டுகள்தான். ஆனால், ஆயுள் முழுக்க ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் நம் உடலுக்கு இதைவிட உன்னதமான பராமரிப்பு தேவை என்பதை எப்போதாவது நாம் நினைத்ததுண்டா? பிறந்ததிலிருந்து இறக்கும் வரை நமக்காக உழைக்கும் இந்த உடலை எவ்வளவு உயர்வாகப் பராமரிக்க வேண்டும் என்று ஒரு நிமிடமாவது எண்ணியதுண்டா? எந்திரங்களுக்குக் கொடுக்கும் கவனிப்பு கூட நமது உடலுக்கு இல்லையே!

காலமுறைப்படி பரிசோதனை

ஒரு கார் என்றால், அதை இத்தனை கிலோ மீட்டர் தூரம் ஓடிய பிறகு, அல்லது இத்தனை நாட்களுக்கு ஒருமுறை பராமரிப்புப் பணி செய்ய வேண்டும் என கார் நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கிறது.

மருத்துவ உலகமும் பல ஆண்டுகள் நிகழ்த்திய ஆய்வுகளை வைத்து சில நடைமுறைகளை நிர்ணயம் செய்துள்ளது. அதாவது காலமுறைப்படி நமது உடலை பரிசோதனை செய்து கொண்டால், உடல் உறுப்புகளின் செயல்திறன்களை நன்றாக வைத்துக் கொள்ள முடியும்.

ஐம்பது வயதிற்கு மேல் பலருடைய உடல், பல நோய்களின் மேய்ச்சல் காடாக உள்ளது. எந்த உபாதையும் தராமல், எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல், இருளில் ஒளிந்திருக்கும் திருடன் போல பல நோய்கள் தொல்லையின்றி மறைந்திருக்கும். இது சம்பந்தப்பட்டவருக்கே தெரியாது.

மூட்டுவலி என்று என்னிடம் வருபவருக்கு முறையாக பரிசோதனை செய்யும் பொழுது அவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக தெரிவித்தவுடனேயே, எனக்கு மயக்கம், தலைவலி போன்ற எந்த தொல்லையுமே இல்லையே, அப்படியிருக்க எப்படி எனக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் என்பர். கண்புரை அறுவை சிகிச்சைக்கு, தகுதியானவரா என்று என்னிடம் சான்றிதழ் பெற வர நோயாளிகள் வருவார்கள். அவர்களின் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சுமார் 300 மி.கி. மேல் இருப்பதை அவரிடம் கூறியதும், நீரிழிவு நோய்க்கான தொல்லை இதுவரையிலும் என்னிடம் இல்லையே அப்படியிருக்க எனக்கு எப்படி இந்நோய் இருப்பதாக கூறுகிறீர்கள் என்று என்னிடம் பலர் ஆச்சரியத்துடன் கேட்பார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் கூறும் ஒரே பதில் இது தான். ‘தொல்லைகள் ஏதுமின்றி மறைந்து இருந்து தாக்கும்’. இதுதான் முதுமைக்கால நோய்களின் வெளிப்பாடு.

senior citizen

சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு எனது கிளினிக்கிற்கு சுமார் 60 வயதுள்ள ஒருவர் தனது மார்பில் ஏதோ சங்கடம் இருப்பதாகக் கூறி வந்தார். பருத்த உடல். இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. எல்லா பழக்கங்களும் உண்டு, மது அருந்துவது, புகை பிடிப்பது உள்பட. நான் ஈ.சி.ஜி. எடுத்து, அதில் மாரடைப்பு வருவதற்கான அறிகுறி தெரியவந்துள்ளது. ஆகையால் அவரை மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறினேன. அதற்கு சம்மதிக்காமல் என்னிடம் மருந்துசீட்டு மட்டிலும் பெற்றுக்கொண்டு சென்று விட்டார். சுமார் 6 மாதங்கள் கழிந்து அதே நபர், மிகவும் இளைத்து மிக்க சோர்வுடன் வந்தார். விசாரித்தில் நான் கொடுத்த மருந்தை சரியாக எடுத்துக் கொள்ளவில்லை. சுமார் 2 மாதங்களில் திடீரென்று மார்புவலி வரவே அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று இதய அறுவை சிகிச்சை பெற்று சுமார் 15 நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பினார். மொத்த செலவு சுமார் 2 லட்சத்தையும் தாண்டிவிட்டது. நகையை அடகு வைத்து மருத்துவச் செலவை சமாளித்தார். இப்பொழுது அவரை வாட்டுவது உடல்நலத்தைவிட நிதிச்சுமையும், மனச்சுமையும் தான். அன்றே மாரடைப்புக்கு தக்க சிகிச்சை பெற்றிருந்தால் ஒரு சில ஆயிரத்தில், அறுவை சிகிச்சையின்றி, வைத்தியம் முடிந்திருக்கும். அவர் பெற்றது மிகவும் விலை உயர்ந்த படிப்பினை!

முதுமையில் மறைந்து இருக்கும் நோய்கள்

⦁ நீரிழிவு நோய்

⦁ உயர் இரத்த அழுத்தம்

⦁ புற்று நோய்

⦁ எலும்பு பலவீனம் அடைதல்

⦁ காச நோய்

⦁ பிராஸ்டேட் சுரப்பியின் வீக்கம்

⦁ கை விரல்களில் ஏற்படும் நடுக்கம்

⦁ இரத்த சோகை

⦁ தைராய்டு சுரப்பியின் தொல்லைகள்

⦁ பித்தப்பையில் கற்கள்

50 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம். இதன் மூலம் மறைந்திருக்கும் நோய்களை எளிதில் கண்டறிய முடியும்; நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டு அதற்கு தக்க சிகிச்சையளிக்க முடியும். குடும்ப மருத்துவரின் ஆலோசனை பெற்று அவரின் பரிந்துரைப்படி மருத்துவப் பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது. முதன் முதலாக பரிசோதனை செய்து கொள்பவர்கள், முடிந்தளவிற்கு எல்லா பரிசோதனைகளையும் செய்து கொள்வது நல்லது. உதாரணம்: ரத்தம் சார்ந்த பரிசோதனைகள், மார்பு எக்ஸ்ரே, ஈ.சி.ஜி., வயிறு அல்ட்ராசோனோகிராம் போன்ற பரிசோதனைகள்.

பரிசோதனைகளில் என்ன வேறுபாடுகள் உள்ளதோ அதற்கு ஏற்றாற்போல மருத்துவரின் உதவியை பெற்று தக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இபபரிசோதனைக்கு சுமார் 3,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை செலவாகலாம். தீபாவளிச் சீட்டு, நகைச்சீட்டு என்றெல்லாம் சேமிக்கிறார்கள். மாதம் 300 ரூபாயாவது உங்கள் உடல் நலத்திற்காக சேமிக்க முடியாதா!

பரிசோதனை செய்து ஒரு ஆண்டு கழித்து முதலில் செய்த எல்லா பரிசோதனைகளும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடந்த ஆண்டில் எந்த பரிசோதனையில் மாற்றம் உள்ளதோ (உதாரணம்: சர்க்கரையின் அளவு, கொழுப்புச் சத்து அளவு, தைராய்டு சுரப்பியின் விவரம்) அவற்றை மட்டும் இந்த முறை செய்தால் போதுமானது. மேலும் கடந்த ஒரு ஆண்டில் வேறு ஏதாவது புதுத் தொல்லைகள் ஏற்பட்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அதற்கேற்ற பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம். இதன் மூலம் ரூ.1,000த்துக்கு உள்ளேதான் செலவாகும்.

Dr V S Natarajan

வழக்கமாக செய்யும் பரிசோதனைகளுடன் சுமார் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தைராய்டு பரிசோதனையும், பாப்ஸ்மியர் பரிசோதனை மற்றும் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது, ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிய மிகவும் உதவும். ஆண்கள் புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோயைக் கண்டறிய பி.எஸ்.ஏ. எனும் ரத்தப் பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும்.

பல பரிசோதனைக் கூடங்களில் சலுகை விலையில் முழுஉடல் பரிசோதனை என்ற பெயரில் விளம்பரம் கொடுத்து, தேவையில்லாத பல பரிசோதனைகளை செய்து பணத்தை வீணாக்குகிறார்கள். இதற்கு நீங்கள் பலிகடாவாக வேண்டாம். இந்த நீண்ட பரிசோதனை முடிவுகளை மருத்துவரிடம் காண்பித்து அவரின் பொன்னான காலத்தையும் வீணாக்க வேண்டாம்.

வருமுன் காக்க, காலமுறைப்படி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்! மிக அவசியம்!! மிகமிக அவசியம்!!!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.