அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,545 கோடி கூடுதல் செலவு; மத்திய அரசு ஊழியருக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயர்வு, கடந்த ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.

விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங் கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் தற்போது தங்கள் அடிப்படை ஊதியத்தில் 31 சதவீத தொகையை அகவிலைப்படியாக பெற்று வருகின்றனர். இதுபோல், ஓய்வூதியதாரர்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 31 சதவீத தொகையை அக விலைப்படியாக பெற்று வரு கின்றனர்.

அமைச்சரவை கூட்டம்

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், விலைவாசி உயர்வை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த 3 சதவீத உயர்வு, இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.

7-வது மத்திய ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைப்படி இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு சிவில் பணியாளர்கள் மட்டுமின்றி பாதுகாப்புப் படைகளில் பணியாற்றுவோருக்கும் பொருந்தும்.

அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,544.50 கோடி கூடுதல் செலவாகும். இதன்மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த ஜூலை 1-ம் தேதி அக விலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது.

அப்போது ஏற்கெனவே இருந்த 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.