கியூட் நுழைவு தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்| Dinamalar

சென்னை : நாடு முழுதும் உள்ள, 54 மத்திய பல்கலைகளில், பட்டப்படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வான, ‘கியூட்’டிற்கு, நாளை முதல் விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது.

மத்திய பல்கலைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு, அந்தந்த நிறுவனங்கள் சார்பில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. சில நிறுவனங்கள், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்தின.

இந்நிலையில், அனைத்து வகை மத்திய பல்கலைகளிலும், மாணவர் சேர்க்கை நடத்த, பொதுவான நுழைவு தேர்வு நடத்தப்படும் என, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., அறிவித்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கையில், பொது நுழைவு தேர்வு கட்டாயம் என்று, கூறப்பட்டுள்ளது.

அதன்படி, திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம ஊரக கல்வி நிறுவனம் ஆகியவற்றில், மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. அதற்கான, ‘கியூட்’ நுழைவு தேர்வுக்கு நாளை முதல் பதிவு துவங்க உள்ளது. வரும், 30ம் தேதி வரை பதிவுகளை மேற்கொள்ளலாம் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை, cuet.samarth.ac.in/என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.