கடின உழைப்பும் தகுதியும் உள்ளவர்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு- ராகுல்காந்தி உறுதி

பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்திற்கு சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பெங்களூருவில் உள்ள அம்மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு 150 இடங்களில் வெற்றி பெறுவதை இலக்காக கொள்ள வேண்டும். 
கடின உழைப்பும் தகுதியும் மட்டுமே தேர்தல் சீட்டு யாருக்கு கிடைக்கும் என்பதை தீர்மானிக்கும். ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் மக்களின் பிரச்சினைகளுக்காக போராடி அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் அயராத அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும்.  
60 லட்சம் புதிய காங்கிரஸ் உறுப்பினர்களை சேர்க்க கடுமையாக உழைத்த ஒவ்வொரு கர்நாடக காங்கிரஸ் தொண்டர் மற்றும் தலைவர் ஆகியோரை நான் வாழ்த்துகிறேன். அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். 
இந்த இளைஞர்களின் வருகை கட்சிக்கு புதிய சிந்தனைகளையும் ஆற்றலையும் கொண்டு வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  
கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் பாஜக ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சி. பணம் மற்றும் சூழ்ச்சி மூலம் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இவ்வாறு ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.