இலங்கை நெருக்கடி | அவசர நிலையை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு: மக்கள் கூடினால் கடும் நடவடிக்கை

கொழும்பு: இலங்கையில் அவசர நிலையை தொடர்ந்து திங்கட்கிழமை காலை வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரைமின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

இலங்கை கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளன. வரலாற்றில் இல்லாத அளவு இலங்கை நிலைக்குலைந்துள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி அதிபர் மாளிகை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் நேற்றுமுன்தினம் நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது.

இதனையடுத்து கொழும்பு நகரில் நேற்று காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் போராட்டம் மீண்டும் நடைபெறாமல் இருக்க கொழும்பு நகர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் பெரும் போராட்டங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாலும் போராட்டங்களை கடுமையாக ஒடுக்கவும் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் யாரையும் புகாரின்றி கைது செய்யவும், தடுப்புக்காவலில் வைக்கவும் முடிவும். அத்துடன் நாடுமுழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை 36 மணி நேரம் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பொது இடங்களில் கூடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.