தலைமை நீதிபதியிடம் திமுக எம்பி மனு உச்ச நீதிமன்றத்திற்கு 4 கிளைகள் வேண்டும்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை நாட்டின் நான்கு இடங்களில் அமைப்பது தொடர்பாக மூத்த வழக்கறிஞரும், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார்.சென்னை, மும்பை ,கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய நான்கு இடங்களில் உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வரக்கூடிய சூழலில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் இது தொடர்பாக தனிநபர் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் இல்லத்தில் நேற்று அவரை நேரில் சந்தித்த வில்சன், மேற்கண்ட கோரிக்கை தொடர்பான கடிதத்தை அவரிடம் வழங்கினார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை அமைக்கும் பட்சத்தில் ஏழை எளியவர்களுக்கும் உடனடியாக நீதி கிடைக்கும். வழக்குகளை நடத்துவதற்கான செலவுகள் பெருமளவில் குறையும்,’ என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.