பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்: ஜி.கே.வாசன்

அவனியாபுரம்:

திருப்புவனம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது. இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. இதனுடைய தாக்கம் போரின் அடிப்படையில் என்றாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகிறது. வருகிற நாட்களில் இது குறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கக்கூடிய நிலையை மத்திய அரசு ஏற்படுத்தும்.

மத்திய அரசை பொறுத்தவரை மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல் தமிழக மக்களின் தேவைகளை படிப்படியாக பூர்த்தி செய்யும்.

இலங்கையில் வசித்து வரும் தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களுக்கு தேவைக்கேற்ப முதலில் உதவி செய்தது இந்திய அரசாகத்தான் இருக்க முடியும்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பல நேரங்களில் இது தொடர்கதையாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய உறுதியான நிலையை மத்திய வெளியுறவுத்துறை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசிடம் உறுதியோடு பேசி தமிழக மீனவர்கள் அச்சமின்றி கடலுக்கு சென்று தங்களின் வாழ்வாதாரம் தொடர மத்திய அரசு துணை நிற்க வேண்டும். அத்தகைய பணியை மத்திய அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.