ரஷியாவின் எண்ணெய் கிடங்கு மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை- உக்ரைன் மறுப்பு

உக்ரைன் மீது ரஷியா ராணுவத்தின் போர் தாக்குதல் நீடித்து கொண்டே இருக்கிறது. உக்ரைனில் முக்கிய நகரங்களில் ரஷிய படை தீவிரமாக தாக்குதல் தொடுத்து வருகின்றன. அவர்களுக்கு எதிராக உக்ரைன் வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே ரஷியாவுக்கும் உக்ரைன் ராணுவம் முதல் முறையாக நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. ரஷியாவின் பெகொரோட் நகரில் எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைனின் ஹெலிகாப்டரில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டு தாக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

இந்நிலையில் ரஷிய எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தவில்லை என்று உக்ரைன் மறுத்துள்ளது.

இதுகுறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறும்போது, ‘ரஷியாவின் பெல்கொ ரோட்டில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுவதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியவில்லை.

எல்லா ராணுவ தகவல்களும் என்னிடம் இல்லாததால் அதனை என்னால் உறுதிபடுத்த முடியவில்லை. துருக்கியில் அமைதி பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட எங்கள் திட்டங்களுக்கு ரஷியாவின் முறையான பதிலுக்காக காத்து இருந்தாலும் பேச்சுவார்த்தைகளில் சமரசம் செய்ய வெளிநாட்டு சக்திகள் உக்ரைனுக்கு அழுத்தம் தரவில்லை’ என்றார்.

ரஷிய மண்ணில் வான் வழி தாக்குதலுக்கு உத்தரவிட்டாரா என்பதை கூற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துவிட்டார். மரியு போல் நகரில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் இன்று 38-வது நாளை எட்டியுள்ளது. தலைநகர் கிவ், புறநகர் கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷிய படையின் தாக்குதல் நீடித்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.