சென்னை: கண்முன்னே நடந்த கொலை முயற்சியை தைரியமாக தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீஸ்

கொலை செய்யும் நோக்கத்துடன் ஒருவரை வெட்டிக் கொண்டிருந்த நபரை போக்குவரத்து போலீசார் துரத்திச் சென்று கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி ஒரு உயிரை காப்பாற்றினர்.
சென்னை செம்மஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமரன் நகர் பகுதி நடை மேம்பாலத்தின் மீது நடந்து வந்து கொண்டிருந்த பாட்ஷா என்பவரை, முன் விரோதத்தின் காரணமாக கோழி கார்த்திக், அருண் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்யும் நோக்கத்தோடு தகராறு செய்து கத்தியால் வெட்டியுள்ளனர்.
image
அப்போது அவ்வழியாக வாகனத்தில் சென்ற செம்மஞ்சேரி போக்குவரத்து ஆய்வாளர் சுகுமார் மற்றும் தலைமை காவலர் பிரகாஷ் ஆகியோர் அதைக் கண்டு வெட்டிக் கொண்டிருந்த இருவரையும் விரட்டிச் சென்றுள்ளனர். இருப்பினும் காலில் வெட்டுப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்த நபரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
image
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்மஞ்சேரி போலீசார், தப்பியோடிய நபர்களில் அருண் எனபவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த தீபாவளி அன்று பாட்ஷா என்பவர் கார்த்திக் மற்றும் அருணை வெட்டியதாகவும் அதன் முன் விரோதம் காரணமாக கொலை செய்ய வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து போலீசாரின் துரித நடவடிக்கையால் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.