CSK vs PBKS: சஹார் திரும்ப வரணும், இந்த ரெண்டு பேர் பார்முக்கு வரணும்… சென்னை எப்போது மீண்டெழும்?

ஐ.பி.எல்லைப் பொருத்தவரை எல்லா முறையும் செட்டிலான அணியோடு தீர்க்கமாய் களமிறங்குவது சென்னை அணிதான். கிட்டத்தட்ட ஏலத்தின்போதே ‘இனி நீ டேவிட் இல்ல, டிராவிட்டு, நீ ரவி மேஸ்திரி இல்ல, ரவி சாஸ்திரி’ என ஒவ்வொரு வீரரின் ரோலும் அணியில் முடிவு செய்யப்பட்டுவிடும். இப்படிப் பல வாரங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டுவிடுவதன் பலனை இதற்கு முன்னால் பார்த்திருக்கிறோம் – கோப்பைகளை வெல்வதன் மூலம். இந்தத் திட்டமிடலுக்கு ஒரு நெகட்டிவ் பக்கமும் இருக்கிறது, இந்த சீசனின் முதல் இரண்டு ஆட்டங்களைப் போல.

பவர்ப்ளேயில் எதிரணியின் டாப் ஆர்டரை தீபக் வழியே திருப்பியனுப்பி மிடில் ஆர்டரை ஜடேஜா, மொயின் வழியே சமாளித்து டெத் ஓவர்களை ஸ்பெஷலிஸ்ட் ப்ராவோ வழியே முடிப்பதுதான் கேம் ப்ளான். ஆனால் சஹாரின் இல்லாமை இந்த மொத்த ப்ளானையும் சிதறடிக்க விளைவாக ப்ளேயிங் லெவனிலும் நிலையற்றத் தன்மை. தொடர் வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி, பவர்ப்ளேயின் 12 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாதது என மோசமான ரெக்கார்ட்கள்.

CSK vs PBKS

மூன்றாவது போட்டியிலும் ப்ளேயிங் லெவனில் மாற்றம் இருந்தது. துஷார் தேஷ்பாண்டேக்கு பதில் உடல்நலம் தேறிவந்துள்ள ஜோர்டன். பஞ்சாப்பில் ராஜ் பவாக்குப் பதில் ஜித்தேஷ் சர்மா, ஹர்ப்ரீத் ப்ராருக்குப் பதில் இன்ஸ்விங் கில்லி என உள்ளூர் வட்டாரத்தில் பாராட்டப்படும் வைபவ் அரோரா.

‘டாஸாவது ஜெயிங்க’ என காயின் நினைத்ததோ என்னவோ சென்னைக்குச் சாதகமாய் விழுந்தது. ட்விஸ்ட்டே இல்லாமல் பௌலிங்கைத் தேர்வு செய்தார் ஜடேஜா. கடைசியாய் நான்கு நாள்கள் முன்பு சென்னை லக்னோவுடன் மோதிய அதே ப்ரபோர்ன் மைதானம்தான். இந்த மூன்று நாள்களாக இரவுநேரம் அங்கே தேங்கிய தண்ணீரை எல்லாம் பக்கத்தூர் வயல் விளைச்சல்களுக்கு திருப்பிவிட்டிருப்பதாகக் கேள்வி. அதனால் பெரிதாக நீரும் இல்லை. பனியும் முன்பு போலில்லை.

ஓப்பனிங் இறங்கினார்கள் மயாங்க் அகர்வாலும் தவானும். பேன்டஸி லீக்கில் மயாங்க் மேல் நம்பிக்கை வைத்து அணியில் எடுக்கும்போது அவர் சட்டென நடையைக் கட்டிவிடுவார். யாருமே எதிர்பார்க்காதபோது இறங்கி வெளுப்பார். இந்த ஆட்டத்தில் ஏராளம் பேர் டீமில் எடுத்திருப்பார்கள் போல. முதல் பந்தில் பவுண்டரி தட்டிவிட்டு அடுத்த பந்திலேயே கவரில் சிம்பிளாய் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார்.

CSK vs PBKS

‘நடிச்சா ஹீரோ, அடிச்சா சிக்ஸு’ மோடில்தான் பிட்ச்சுக்கே வருகிறார் பனுக்கா ராஜபக்‌ஷே. ஜோர்டன் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்தே வானத்தைத் தொட்டுவிட்டு வந்தது. அடுத்த பந்தில் என்ன நினைத்தாரோ தட்டிவிட்டு ஓடிவர, பாதிவழியில் திருப்பியனுப்பினார் தவான்.

‘தனியே மேய்ந்துகொண்டிருக்கிறது இந்த மான்’ என நாம் நினைத்துக்கொண்டிருக்கும்போதே சட்டென பாய்ந்து வருமே ஒரு சிங்கம், அப்படித் திடீரென ப்ரேமுக்குள் வந்தார் தோனி. ஜோர்டன் எறிந்த பந்தை பிடித்து மின்னல்வேகத்தில் ஸ்டம்ப்பிற்குத் திருப்பி ஒரு ரன் அவுட். மற்றுமொரு முறை ‘தல நாஸ்டாலஜியா’ நினைவுகளுக்குள் சென்றுவந்தார்கள் பார்த்தவர்கள்.

‘பவர்ப்ளேல விக்கெட்டு வந்துடுச்சு, விக்கெட்டு வந்துடுச்சு’ என குதித்த சென்னை ரசிகர்களைக் கடைக்கண்ணால் பார்த்தபடி இறங்கினார் லிவிங்ஸ்டன். மற்ற டி20 லீக்குகளைப் பொருத்தவரை இந்த லிவிங்ஸ்டன் நம்மூர் ‘வானத்தைப் போல’, ‘சிவாஜி’ ஹிட் படங்களில் கெஸ்ட் ரோலில் வரும் லிவிங்ஸ்டன் போலத்தான். கண்டிப்பாய் ஹிட். ஆனால் ஐ.பி.எல்லைப் பொருத்தவரை அதே நம்மூர் லிவிங்ஸ்டன் ஹீரோவாய் நடித்த படங்களைப் போல. ம்ஹும்! ‘வரலாற்றை மாற்றியெழுதுகிறேன் தோழர்’ என மட்டையைப் பிடித்து அவர் சுழற்றியதில் சிதறின சிக்ஸர்கள். முகேஷ் சௌத்ரி வீசிய ஐந்தாவது ஓவரில் மட்டும் 26 ரன்கள். அடுத்துவந்த ஜடேஜா பந்தையும் சிக்ஸருக்குத் தூக்க விறுவிறுவென ஏறியது ஸ்கோர். போதாக்குறைக்கு கைக்கு வந்த கேட்ச்சை வேறுவிட்டார் ராயுடு.

CSK vs PBKS

சமீப காலமாக பௌலிங்கில் மிரட்டும் ப்ரிட்டோரியஸைத்தான் திரும்பவும் ஜடேஜா அழைத்துவர வேண்டியதாய் இருந்தது. அவர் ரன்ரேட்டைக் கட்டுபடுத்த மற்ற பௌலர்களை டார்கெட் செய்யவேண்டிய நெருக்கடி பேட்ஸ்மேன்களுக்கு. ப்ராவோவை தவான் குறிவைக்க கப்பென கேட்ச் பிடித்து வெளியே அனுப்பினார் ஜடேஜா. அடுத்த ஓவரிலேயே விட்டதை அதே ஜடேஜா பந்தில் பிடித்தார் ராயுடு. லிவிங்ஸ்டனும் காலி. 11 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் நான்கு விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்தது.

களத்தில் ஜித்தேஷ், ஷாரூக் என இரண்டு புதிய பேட்ஸ்மேன்கள். தன்னைப் பற்றிய ஹைப் எல்லாம் நிஜம்தான் என்பதைப் போல மடங்கி நின்று ஒரு சிக்ஸ் அடித்தார் ஜித்தேஷ், அந்த ஒரு ஷாட் அவரின் கான்பிடன்ஸை சென்னை பௌலர்களுக்குச் சொல்லியது. மற்றொரு சீனியரான ஜடேஜாவையும் சூப்பராக எதிர்கொண்டார் ஜித்தேஷ். மீண்டும் ஆபத்பாந்தவான் ப்ரிட்டோரியஸ் வந்துதான் காப்பாற்ற வேண்டியதாய் இருந்தது. வித்தியாசமாய் ரிவர்ஸ் ஸ்கூப் அடிக்க முயன்று ஜித்தேஷ் அவுட்டாக, அவரின் குட்டி கேமியோவால் ஸ்கோர் 150-ஐ நெருங்கியிருந்தது.

பினிஷர் ரோலில் களமிறங்கும் ஷாரூக்கிற்கு ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யவேண்டிய வேலையும் சேர்த்து! ‘ஸாரி, அதெல்லாம் பழக்கமில்ல’ என அடுத்த ஓவரில் அவரும் நடையைக் கட்ட, தத்தளித்தது ஸ்கோர் போர்டு.

CSK vs PBKS

ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடும் அத்தனை டீமிலும் இப்படி ஒரு கேரக்டர் இருக்கும். பந்தை அடிக்க முழு உடலையும் செலுத்தி அதை நோக்கிப் பாய்வார்கள். அவர்களுக்கு சிக்ஸர் மட்டுமே ரன்கள். ஒன்று, இரண்டு எல்லாம் அவர்கள் கணக்கிலேயே இருக்காது. இந்த கேரக்டரின் சர்வதேச வெர்ஷன்தான் ஒடியன் ஸ்மித். பந்தை குறுக்க மறுக்காக அடிக்க விரட்டி விரட்டி சோர்ந்து போய் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் ராகுல் சஹாரும் ரபாடாவும் சம்பிரதாய ஆட்டங்களை ஆட, ஸ்கோர் தட்டுத் தடுமாறி 180-ஐ தொட்டு நின்றது. கடைசி 54 பந்துகளில் வெறும் 65 ரன்கள்தான்.

‘இரண்டு மேட்ச்லயும் சொதப்பிய பௌலிங்கிலேயே தேறிட்டோம். பேட்டிங்தானே… பத்து பேரு இருக்காங்க. பாத்துக்கலாம் விடு’ என இடைத்தேர்தலை அணுகும் ஆளுங்கட்சி போல அசால்ட்டாக இருந்தது சென்னை முகாம். ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளித்தது பஞ்சாப். வழக்கம்போல ‘இன்னும் என் டைம் வரல’ என மோசமாக அவுட்டாகி நடையைக் கட்டினார் ருத்துராஜ். கடந்த மூன்று மேட்ச்களிலும் சரியாக நான்காவது பந்தில் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார் ருத்து.

வழக்கமாய் இப்படி ருத்து சொதப்பினால் மறுமுனையில் நங்கூரமாய் ஊன்றி நிற்பார் டுப்ளெஸ்ஸி. இப்போது அதேயளவு அனுபவமிருக்கும் உத்தப்பா அப்படி நிற்பார் என எல்லாரும் எதிர்பார்க்க, வைபவ்வின் இன்ஸ்விங்கிற்கு அவுட்டாகி வெளியேறினார். சென்னை கடந்த சீசனில் ஆதிக்கம் செலுத்த டாப் ஆர்டரில் ஆடிய மூன்று பேரின் பங்களிப்பு முக்கியக் காரணம். இந்த முறை மூன்றாவது ஆளான மொயினும் வைபவ்வின் ஸ்விங்கைக் கணிக்க முடியாமல் போல்டாக, மொத்த சுமையும் மிடில் ஆர்டர் மேல் விழுந்தது.

கேப்டன் என்கிற பொறுப்போடு களமிறங்கினார் ஜடேஜா. ஆனால் சரியாக மூன்றே பந்துகள். அர்ஷதீப்பின் லென்த் பாலில் ஸ்டம்ப் தெறித்தது. முந்தைய பேட்ஸ்மேன் அவுட்டாகி பெவிலியன் போய் பேடைக் கழற்றுவதற்குள் அடுத்த பேட்ஸ்மேன் அவுட்டாகி கூடவே வந்த அந்த வேகம்… கிலியில் முழி பிதுங்கியது மஞ்சள் படைக்கு!

CSK vs PBKS

ராயுடுவோடு ஜோடி சேர்ந்தார் தூபே. இப்படியான தருணங்களில் நிதானமாக ஆடி கடைசி ஐந்தாறு ஓவர்களில் அட்டாக் ஆடுவார் ராயுடு. அனுபவம் அப்படி. ‘அப்படியா நினைச்சீங்க? தப்பாச்சே’ என ஒடியன் பந்தைத் தடுமாறித் தொட்டு கேட்ச் கொடுத்து அவரும் வெளியேற, எண்ட் கார்டை அப்போதே எழுதத் தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள். ‘என்னய்யா சும்மா சும்மா என்னைக் க்ரீஸுக்கு கொண்டுவந்துடுறீங்க?’ என சலித்தபடி வந்தார் தல.

ஷிவம் தூபே – கடந்த மேட்ச்சின் ஹீரோவும் இவரே, வில்லனும் இவரே! இந்த முறை ஹீரோ மட்டுமே. புட்வொர்க்கே இல்லாத பேட்டிங் ஸ்டைல் தூபேவினுடையது. அதனால் லெக் ஸ்பின்னர் சஹாரை தன்மையாக சமாளித்து, ஸ்மித், ரபாடா போன்ற பாஸ்ட் பௌலர்களின் வேகத்தையே தனக்குச் சாதகமாக்கி பந்தை விரட்டி ஸ்கோரை முடிந்தளவிற்கு ஏற்றிக்கொண்டிருந்தார். மறுமுனையில் தோனிதான். ஆனால் 2019 வரை நாம் பார்த்த தோனி நிச்சயம் இவரில்லை என்பதால் தூபே என்னும் ஒற்றைக் கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்தது சி.எஸ்.கேவின் வெற்றி.

பத்து ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 53/5. அடுத்த மூன்று ஓவர்களிலும் பெரிதாக ரன்கள் வந்துவிடவில்லை. ரபாடா வீசிய 14வது ஓவரில் 18 ரன்களை குவித்தார் தூபே. 26 பந்துகளில் அரைசதம். ‘ஆஹா… ஒளி வந்துவிட்டது’ என சட்டையைக் கழற்றிச் சுற்றினார்கள் ரசிகர்கள். ‘இந்தா ப்யூஸ் கட்டையைப் பிடுங்கிவிடுறேன்’ என முதல் பந்தில் தூபேவையும் அடுத்த பந்தில் ப்ராவோவையும் வெளியே அனுப்பி ஆட்டையைக் கலைத்தார் லிவிங்ஸ்டன். ‘உங்களை அடிக்கவிட்டதுக்கு நீங்க காட்டுற நன்றிக்கடன் இதுதானா கோப்ப்ப்பால்’ எனக் கேட்டு மாய்ந்து போனார்கள் ரசிகர்கள்.

CSK vs PBKS

‘அடுத்த ப்ராவோ’ எனக் கணிக்கப்பட்ட ப்ரிட்டோரியஸும் நான்கே பந்துகளில் நடையைக் கட்ட, சம்பிரதாயத்துக்கு அடிக்கும் பவுண்டரி, சிக்ஸரை அடித்து கீப்பர் ஜித்தேஷின் சூப்பரான அப்பீலால் அவுட்டானார் தோனி. மீதமிருந்த ஒரு விக்கெட் கடைசியாக சஹாருக்கு போனஸ். 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தம்ஸ் அப் காட்டியது பஞ்சாப். மேன் ஆப் தி மேட்ச் சந்தேகமே இல்லாமல் பேட்டிங் – பௌலிங் என இரண்டிலும் கலக்கிய லிவிங்ஸ்டன்தான்.

தோனி இதற்கு மேலும் பேட்டிங்கில் ஆட்டத்தைத் தீர்மானிக்கும் சக்தி இல்லை. கோர் டீமில் ஒருவரான தீபக் சஹார் அணியிலேயே இல்லை. ருத்துராஜ், ஜடேஜா ஆகிய மற்ற இருவரும் (இந்த பார்ம் தொடரும்பட்சத்தில் வருங்காலத்தில் தூபேக்கும் கோர் அணியில் இடமுண்டு) க்ளிக்கானால் மட்டுமே இந்த சீசனில் சி.எஸ்.கே ப்ளே ஆப் வாய்ப்பை நினைத்துப் பார்க்கவாவது முடியும். கிட்டத்தட்ட டுப்ளெஸ்ஸி போலவே தேவைக்கேற்ப கியரை மாற்றி ஆடக்கூடிய கான்வேயின் இடத்தில் முழுக்க முழுக்க அட்டாக் மோடில் ஆடும் உத்தப்பாவை இறக்கும்பட்சத்தில் மிடில் ஆர்டரின் மேல் சுமை ஏறுவதை தவிர்க்கவே முடியாது. ஆனால் அந்தப் பொறுப்பைத் தாங்குவதில்தான் ஏகத்துக்கும் தடுமாற்றம் தெரிகிறது ஜடேஜாவிடம்.

CSK vs PBKS

“ருத்துராஜ் அபாரமான பிளேயர். அவருக்கு நம்பிக்கையளிக்க வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம்” என இந்த ஆட்டம் முடிந்தபின் சொன்னார் ஜடேஜா. அதுசரி, கேப்டனுக்கே இப்போது தேவையாய் இருக்கும் தன்னம்பிக்கையை யார் அளிப்பார்கள்?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.