உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 500 கிலோ வெடிகுண்டு விமானப்படையிடம் ஒப்படைப்பு

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் ராணுவ வெடிபொருட்கள் தயாரிக்கும் ஓ.எப்.கே. தொழிற்சாலை (கமாரியா ஆயுத தொழிற்சாலை) கடந்த 1943-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலை 2-ம் உலகப்போரின் போது வெடிபொருட்களை தயாரித்து வழங்கியது.
சீனாவுடன் 1962-ம் ஆண்டு நடந்த போரின்போதும் பாகிஸ்தானுடன் 1965, 1971-ம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களின் போதும் பல்வேறு வெடிபொருட்ளை அந்த தொழிற்சாலை தயாரித்து வழங்கியது. துணை ராணுவப்படைகளுக்கான ஆயுதங்கள், வெடிபொருட்களையும் ஓ.எப்.கே. தொழிற்சாலை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் ஓ.எப்.கே. தொழிற்சாலை 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டை தயாரித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய வெடிகுண்டு இதுவாகும். அந்த வெடிகுண்டு இந்திய விமானப்படையின் பயன்பாட்டுக்காக நேற்று வழங்கப்பட்டது.
இது தொடர்பாக ஒ.எப்.கே. தொழிற்சாலையின் பொது மேலாளர் எஸ்.கே. சின்கா கூறியதாவது:-
ஓ.எப்.கே. தொழிற்சாலை தயாரித்துள்ள 500 கிலோ எடை கொண்ட இந்த வெடிகுண்டு இந்திய விமானப்படையின் தாக்குதல் திறனை மேம்படுத்தும். முதல் கட்ட மாக 48 வெடிகுண்டுகள் விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த வெடிகுண்டு தயாரிப்பு பணியில் பாதுகாப்பு துறையை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் நிபுணர்கள் ஈடுபட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.