வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பார்லி கலைக்கப்பட்டதால் பிரதமர் இம்ரான் கான் பிரதமராக நீடிக்க முடியாது என அமைச்சரவை செயலாளர் அறிவித்த நிலையில், காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான் பிரதமராக நீடிப்பார் என அந்நாட்டு அதிபர் அறிவித்ததால், பாகிஸ்தான் அரசியலில் குழப்பம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம், அந்நாட்டு பார்லிமென்டில் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, பார்லி.,யை கலைக்க கோரி அதிபர் ஆரிப் அல்வியிடம் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதினார். இதனை ஏற்ற அதிபர் பார்லிமென்டை கலைத்ததுடன், 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார். நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளன. இந்த நிலையில், பார்லி கலைக்கப்பட்டதால் இம்ரான் கான் பிரதமர் இல்லை என பாக்., அமைச்சரவை செயலாளர் திடீரென அறிக்கை வெளியிட்டார்.
அதில், ‛அமைச்சரவை மொத்தமாக கலைக்கப்பட்டுவிட்டது. அதனால் இம்ரான் கான் தானாக பதவியை இழக்கிறார். அமைச்சரவை இல்லாத காரணத்தால் பிரதமராக நீடிக்க முடியாது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பாக்., அரசியலில் குழப்பம் துவங்கிய நிலையில், அதிபர் தரப்பில், காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான் கான் பிரதமராக நீடிப்பார் என்ற அறிவிப்பு வெளியானது. இருவேறு அறிவிப்புகள் அடுத்தடுத்து வந்ததால் பாக்.,கில் குழப்பம் நீடிக்கிறது. ஆனாலும், அதிபரின் அறிவிப்பின்படி இம்ரான் பிரதமராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement