இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்களும் பதவி விலகல்.!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்களும் பதவி விலகினர். பிரதமர் மஹிந்த ராஜபக்சே தொடர்ந்து பதவியில் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கொரோனாவால் சுற்றுலாத்துறை முடக்கம், அந்நியச் செலாவணி வீழ்ச்சி, பண வீக்கம், அத்தியாவசிய பொருட்கள் இமாலய விலையேற்றம், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, மின் தடை, கடும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இலங்கை கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது.

அதிபர் கோத்தபயவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியதால் போராட்டத்தை கட்டுப்படுத்த நாடு தழுவிய அவசர நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் 36 மணி நேர ஊரடங்கை அமல்படுத்தினர்.

ஊரடங்கை மீறி அதிபர் இல்லம் உள்ள இடம், கொழும்புவின் பல்வேறு பகுதிகளில் திரண்ட இளைஞர்கள், பொது மக்கள் அரசுக்கு எதிராக மெகா போராட்டத்தை நடத்தினர். அதிபருக்கு எதிராக ஆவேச கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் பொது மக்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டினர்.

அவசரநிலையை திரும்பப் பெறக் கோரி அதிபர் இல்லம் முன் ஒருவர் மின்மாற்றி மீது ஏறி தற்கொலை செய்து கொண்டார். ஊரடங்கை மீறிய 700க்கும் மேற்பட்டோரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போராட்டம் தீவிரம் அடைந்து வரும் சூழலில் நேற்று நள்ளிரவு அமைச்சரவை கூடியது. அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்கள் ராஜினாமா செய்வதாக முடிவெடுத்து பிரதமரிடம் கடிதம் அளித்ததாகவும், விரைவில் அதிபரிடம் ராஜினாமா கடிதங்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்சே தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையுடன் 36 மணி நேர ஊரடங்கு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காபந்து அரசு அமைத்து நாட்டின் ஸ்திரத்தன்மை மேம்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.