கேரளாவில் செல்போன் பேசுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவனை தேடும் பணியில் அம்மாநில காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் கொச்சியில் அஸ்ஸாமில் இருந்து கேரளா வந்து பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளி பக்ரூதீன் தனது மனைவி கலிதாவுடன் வசித்து வந்தார். பக்ருதீன் அங்குள்ள ப்ளைவுட் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். கணவன் மனைவி இருவரும் சண்டையிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதுபோல கடந்த வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் வழக்கமான சண்டை என நினைத்து இருவரையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். திடீரென மனைவி கலிதாவின் அலறல் சத்தம் கேட்டவுடன் சென்று பார்த்தபோது கலிதா கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
காவல்துறைக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுக்க, விரைந்து வந்து விசாரணையை துவக்கினர் காவல்துறையினர். கொலை செய்து விட்டு தப்பியோடிய பக்ருதீனை தேடும் பணியை முடுக்கி விட்டனர். முதற்கட்ட விசாரணையில் கலிதாவுக்கும் பக்ருதீனுக்கும் செல்போன் பேசுவது தகராறு ஏற்பட்டு, அதன் முடிவாக பக்ருதீன் கலிதாவை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக பெரும்பாவூர் காவல் நிலைய போலீஸ் அதிகாரி தெரிவித்தார். பக்ருதீன் தலைமறைவாக உள்ளதால், அவரை பிடிக்க கேரள போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM