டெல்லியில் மாசுபாட்டை குறைக்க வேண்டியது ஆம் ஆத்மி அரசின் பொறுப்பு- சுற்றுச்சூழல் துறை மந்திரி தகவல்

புதுடெல்லி:
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, டெல்லியின் மாசுபாடு தொடர்பாக பாஜக எம்பி பர்வேஷ் சாஹிப் சிங் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ், தலைநகர் டெல்லியில் மாசுபாட்டை குறைக்கும் பொறுப்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு உள்ளது என தெரிவித்தார்.
“தேசிய தலைநகர பிராந்தியம் (என்சிஆர்) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்று மாசுபாடு பிரச்சினைகளை கையாள்வதில் காற்று தர மேலாண்மை ஆணையம், பங்கேற்பு மற்றும் கூட்டு அணுகுமுறையை மேற்கொண்டது. மாசுபாட்டை குறைக்க வேண்டிய பொறுப்பு டெல்லி அரசுக்கு உள்ளது. 
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, என்சிஆர் பகுதியில் காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நடுத்தர மற்றும் நீண்ட கால தீர்வுகளுக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து  காற்று தர மேலாண்மை ஆணையம் ஆலோசனைகளை வழங்கும்படி அழைப்பு விடுத்தது. 
அதன்படி, பல துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. பரிந்துரைகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழு,  காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொடர்ந்து கலந்துரையாடி வருகிறது” என்றார் பூபேந்தர் யாதவ்.
டெல்லியின் மாசு பிரச்சனையைத் தீர்ப்பதில் ஆம் ஆத்மி அரசாங்கம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டினார். உறுதியான நடவடிக்கை எடுக்காமல், வார்த்தை ஜாலம் காட்டுவதாகவும் பர்வேஷ் சாஹிப் சிங் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.