தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கிருஸ்துவ பள்ளியில் படித்துவந்த, அரியலூர் மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் தன் மரணத்துக்கு காரணம், மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டதாக மரண வாக்குமூலம் கொடுத்துள்ளதாக ஒரு காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து இருக்கிறது.
இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்த போது, மாணவியின் தந்தை முருகானந்தம் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த விவகாரத்தில் தற்போது சிபிஐ வழக்கு விசாரணைக்கு தடை இல்லை என்ற உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
இந்நிலையில், தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளார். அதில், சிபிஐ விசாரணை வேண்டும் என கோரவில்லை, நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணையில் மதமாற்ற குற்றச்சாட்டை விசாரிக்க போலீசார் மறுத்துவிட்டது. காவல் துறையின் செயல்பாடுகளில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் மட்டுமே, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்” என்று மாணவியின் தந்தை பதிலளித்துள்ளார்.