பாக். இடைக்கால பிரதமர் குல்சார் அகமது – இம்ரான் கான் பரிந்துரை!

பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக முன்னாள் நீதிபதி குல்சார் அகமதுவின் பெயரை இம்ரான் கான் பரிந்துரை செய்து உள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு தான் காரணம் எனக் குற்றம் சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தன.

பிரதமர் இம்ரான் கானுக்கு பெரும்பான்மை இல்லாததால், அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டு புதிய ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பாராதவிதமாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்கும்படி, அதிபர் ஆரிப் ஆல்விக்கு, பிரதமர் இம்ரான் கான் பரிந்துரை செய்தார்.

பாக். நாடாளுமன்றம் கலைப்பு – 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல்!

இதை ஏற்ற அதிபர் ஆரிப் ஆல்வி, நாடாளுமன்றத்தை கலைத்து, அடுத்த 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என, அறிவித்தார். இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தாக்கல் செய்துள்ளன. இதை அடுத்து,
இடைக்கால பிரதமர்
நியமிக்கப்படும் வரை, இம்ரான் கானே பிரதமராக நீடிப்பார் என்று அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்தார்.

இந்நிலையில் இன்று, பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவை நியமிக்கும்படி அதிபர் ஆரிப் ஆல்விக்கு இம்ரான் கான் பரிந்துரை செய்துள்ளார். இந்தத் தகவலை இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி உறுதிப்படுத்தி உள்ளது. இதற்கிடையே பொதுத் தேர்தலை சந்திக்க ஆயத்தப் பணிகளில் இம்ரான் கான் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்திநடுக்கடலில் கவிழ்ந்த படகு… என்ன ஆனார்கள் 100 பயணிகள்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.