பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைவர்- சரத் பவார் பேட்டி

மும்பை:
2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். 
எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் இல்லை என தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி , அந்த கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமை ஏற்க வேண்டும் என சூசகமாக குறிப்பிட்டிருந்தார். 
சரத்பவார் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்த சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் சரத்பவார் பேசியதாவது:
அண்மையில் எங்கள் கட்சியின் இளைஞரணி சார்பில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக நான் இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அந்த பதவி மீது தமக்கு ஆர்வம் இல்லை. நான் அந்த பொறுப்பை ஏற்க மாட்டேன். எனினும் பாஜகவை எதிர்த்துப் போராட எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க உதவுவேன். 
ஆட்சியில் இல்லா விட்டாலும் காங்கிரஸ்  நாடு முழுவதும் கிளைகளை கொண்டுள்ள கட்சி. எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்து அந்த கட்சியை விலக்கி வைக்க முடியாது .
நாட்டில் ஒரு கட்சி மட்டும் வலுவாக இருந்தால், அது புதினைப் போல மாறும் , இந்தியாவில் ஒருபோதும் புதின் இல்லை என்று நம்புகிறேன். இவ்வாறு சரத் பவார் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.