புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த மேற்பனைக்காட்டில் எம்.முகமது அலி என்பவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி சம்சுல் பீவி பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கினார்.
மேலும், விளை நிலத்தில் கட்டிடம் ஒன்றை கட்டினார். பின்னர் அந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் கோபுரங்களை அமைத்து, மசூதிபோன்று மாற்றி அமைத்தார்.
அந்த இடத்தில் அனுமதியின்றி மசூதி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் கடந்த ஆண்டு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் மசூதிபோன்ற அமைப்பு அகற்றப்படும் என அலுவலர்களால் உறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் தற்போதுவரை அகற்றப்படவில்லை.
இந்நிலையில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில், பாஜகவினர், மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோயிலில் இருந்து சம்பந்தப்பட்ட கட்டிடத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக இன்று சென்றனர்.
அப்போது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி, வரும் ஏப்.12-ம் தேதிக்குள் மசூதி போன்ற அமைப்பை, சம்பந்தப்பட்டோரே இடித்துக்கொள்வது. இல்லையேல், இடித்து அகற்றப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து, போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.