கொல்கத்தா: ‘எரிபொருள் விலை உயர்வுக்கு தீர்வு காண்பதற்கு ஒன்றிய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும்’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ எரிபொருள் விலை உயர்வை சமாளிப்பதற்கான எந்த திட்டமும் ஒன்றிய அரசிடம் இல்லை. இந்த நெருக்கடியான நிலைமைக்கு பாஜ தான் காரணம். உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பாஜ நாட்டிற்கு அளித்த பரிசு தான் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு. எதிர்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்துவதற்கு பதிலாக நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சிக்கல்களை தீர்ப்பதற்கு ஒன்றிய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்’’ என்றார்.