தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஒரு பிரபல நட்சத்திர விடுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் அனுமதி வழங்கப்பட்ட நேரத்தைப் தாண்டியும் மது விருந்து நடைபெறுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் அங்குச் சோதனை மேற்கொண்டபோது, 148 பேர் அந்த மது விருந்தில் கலந்துகொண்டது தெரியவந்தது. மேலும், அங்கு கொகைன் உள்ளிட்ட போதைப்பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அந்த மது விருந்தில், சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகளும், திரைப்பட நடிகையுமான நிஹாரிகா கோனிடேலா, பாடகர் ராகுல் உட்பட அரசியல்வாதிகள், காவல்துறையினர் என 30-க்கும் மேற்பட்ட வி.ஐ.பி-க்களின் பிள்ளைகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை செய்துள்ளனர். விசாரணை முடிந்தபிறகு, மீண்டும் வரவேண்டும் என்று கூறி அவர்களை அனுப்பிவைத்துள்ளார்கள்.
போலீஸார் இந்த விவகாரம் தொடர்பாக அந்த நட்சத்திர விடுதியின் மேலாளர்கள் இருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதோடு, பார்ட்டியில் கலந்துகொண்டவர்களுக்குப் போதைப்பொருள்கள் கொடுத்தது யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்துவருகிறார்கள். காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டவர்களிடம் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டறிய, அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
நிஹாரிகா கைது தொடர்பாக அவர் தந்தை நாக பாபு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “போதைப்பொருள் பயன்படுத்திய இடத்தில் என் மகள் இருந்திருக்கிறார். அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பதை காவல்துறையினர் உறுதிசெய்துள்ளார். தேவையில்லாத வதந்தியைப் பரப்பவேண்டும்” என்று பேசியுள்ளார்.