பெர்லின் : ஜெர்மனியில், 87 முறை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட, 61 வயதான நபர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி பெற தகுதியானோரில், 75 சதவீதம் பேர், இரண்டு டோஸ்களையும் செலுத்திவிட்டனர்; 58 சதவீதம் பேருக்கு, ‘பூஸ்டர்’ டோஸ் எனப்படும், கூடுதல் டோசும் போடப்பட்டுவிட்டது.இந்நிலையில் இங்கு வசிக்கும், 61 வயதான ஒருவர், 87 முறை தடுப்பூசிகளை செலுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாக்சோனி உள்ளிட்ட நான்கு மாகாணங்களில் உள்ள வெவ்வேறு தடுப்பூசி முகாம்களுக்கு சென்று, அவர் தடுப்பூசிகளை செலுத்தி வந்துள்ளார்.
சாக்சோனியின் டிரெஸ்டன், எய்லன்பர்க், லீப்சிக் ஆகிய நகரங்களில் உள்ள முகாம்களுக்கு, அவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதில், டிரெஸ்டன் நகரில் உள்ள முகாமுக்கு சென்றபோது, அங்கிருந்த ஒரு மருத்துவ ஊழியர், அவரை அடையாளம் பார்த்துள்ளார். போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், அந்த நபரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டில் தடுப்பூசி செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களிடம் இருந்து பணத்தை பெற்று, அவர்களுக்கு பதிலாக, இவர் சட்டவிரோதமாக தடுப்பூசி போட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
Advertisement