இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு ரூ 5.08 கோடி செலவில் புதிய வாகனங்கள்: முதல்வர் வழங்கினார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு ரூ 5.08 கோடி செலவில் 69 புதிய வாகனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (4.4.2022) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்களுக்கு 5 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவிலான 69 புதிய வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக, 2 அலுவலர்களுக்கு வாகனங்களை வழங்கினார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, 5 திருக்கோயில்களில் முழு நேர அன்னதான திட்டம், 100க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், திருக்கோயில்களின் நந்தவனங்களை சீரமைத்தல், 1000 மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் நடத்த அனுமதி, ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு புதிய பள்ளி, கல்லூரிகள் தொடங்குதல், போன்ற பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

2021-22ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், அலுவலர்களுக்கு 108 வாகனங்களை 8 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, முதற்கட்டமாக, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், மக்கள் தொடர்பு அலுவலர், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் பொறியாளர்கள் ஆகியோர்களுக்கு 5 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் 69 புதிய வாகனங்களை தமிழக முதல்வர் வழங்கினார்.

இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு 69 புதிய வாகனங்களை வழங்குவதன் அடையாளமாக இன்று 2 அலுவலர்களுக்கு வாகனத்தின் சாவியை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தர மோகன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.