பிர்பூம் வன்முறை: உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பணி நியமனக் கடிதத்தை வழங்கினார் மம்தா

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பகதூர் ஷேக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் கடந்த மார்ச் 21-ம் தேதி அன்று ஒரு கும்பல் வீடுகளுக்குத் தீ வைத்தது. இதில் எட்டு பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கு சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து  ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது, பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், சேதமடைந்த வீடுகளை புனரமைக்க தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், பிர்பூம் மாவட்டத்தில் வீடுகள் எரிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட 10 குடும்ப உறுப்பினர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை முதல்வர் மம்தா பானர்ஜி வழங்கினார்.

மேலும், ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள நிறுவனங்களில் பணியில் சேரும்போது இறந்தவரின் உறவினர்கள் எந்த பிரச்சினையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் மாவட்ட ஆட்சியருக்கு மம்தா உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்.. டி.ஆர்.எஸ்.கட்சியுடன் கூட்டணி இல்லை- ராகுல் காந்தி உறுதி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.