லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவி- அமெரிக்கா உறுதி

06.04.2022
04.10: ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்புத்துறை செயலாளர்  ஜென் சாகி தெரிவித்துள்ளார்.  ராணுவ உதவியாக இருந்தாலும் சரி, மனிதாபிமான உதவியாக இருந்தாலும் சரி, பொருளாதார உதவியாக இருந்தாலும் சரி, உக்ரைனுக்கு எங்களின் வரலாற்று ரீதியான ஆதரவைத் தொடர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் இந்தப் போரிலிருந்து மீள சில காலம் ஆகும் என்றும் அதுவரை அமெரிக்கா உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
03.50:  உக்ரைனில் ரஷிய ராணுவ வீரர்கள் கொடூரமான அட்டூழியங்களைச் செய்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார். 
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், ரஷிய படையினர் பொதுமக்களை சித்திரவதை செய்வதுடன்,  அடுக்குமாடி குடியிருப்புகளில் கையெறி குண்டுகளை வீசுவதாகவும்  கூறினார். கார்களில் செல்லும் மக்கள், ராணுவ டேங்கிகள் மூலம் நசுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
02.10: மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் பகுதியில் ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு மரியபோல் கடல் பகுதியில் வெளிநாட்டுக் கப்பல் மூழ்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
01.10: உக்ரைனில் ரஷியா போர் தொடங்கியது முதல் 1,19,000 ஆயிரம் குழந்தைகள் உள்பட மொத்தம் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் தாமாகவே முன் வந்து ரஷியாவிற்கு சென்று விட்டதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷிய பிரதிநிதி  வாசிலி நெபென்சியா தெரிவித்துள்ளார்.
05.04.2022
22.15: உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை உள்பட பல்வேறு உலக தலைவர்கள் கடு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரஷிய வீரர்கள் புச்சா நகரை விட்டு வெளியேறிய பிறகு கண்டெடுக்கப்பட்ட உடல்கள் குறித்து வெளியான புகைப்படங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன என இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.
20.00: பகை நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்யும் நாடுகளை ரஷியா தொடர்ந்து கண்காணிக்கும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
15.30: ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்குவதை தற்போதைக்கு நிறுத்த முடியாது என ஜெர்மனி தெரிவித்துள்ளது. ரஷியாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்த சில காலம் தேவைப்படுகிறது என ஜெர்மனி நிதி மந்திரி தெரிவித்தார். 
13.30: சுமி பிராந்தியத்திலும் பொதுமக்கள் டார்ச்சர் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக கவர்னர் தெரிவித்துள்ளார்.
13.00: ரஷியா தாக்குதலில் 165 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 266 குழந்தைகள் காயம் அடைந்ததாகவும் உக்ரைன் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
12.50: ஐரோப்பிய கமிஷன் தலைவர், ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத்துறை மந்தரி கீவ் செல்ல இருப்பதாக ஸ்லோவேனியா பிரதமர் தெரிவித்துள்ளார்.
04.10: புச்சா நகரில் ரஷிய படைகள் நிகழ்த்திய படுகொலைகளுக்கு பதிலடியாக 40 ரஷிய தூதர்களை வெளியேற்ற ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல் பிரான்ஸ் அரசும் தனது நாட்டில் உள்ள 35 ரஷிய தூதர்களை வெளியேற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் ஆதரவு நாடுகளும் ரஷிய தூதர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
03:20: உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள ரஷிய படைகளில் மூன்றில் இரண்டு பங்கு படைகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த படையினர் பெலாரஸில் ஒருங்கிணைக்கப்பட்டு, உக்ரைனில் உள்ள வேறு பகுதிகளுக்கு அனுப்பப் படுவார்கள் என எதிர்பார்க்கப் படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
12.50: ரஷிய வீரர்கள் புச்சா நகரை விட்டு வெளியேறிய பிறகு கண்டெடுக்கப்பட்ட உடல்கள் அதிர்ச்சி அளிப்பதாக அல்பேனிய பிரதமர் எடிராமா தெரிவித்துள்ளார். இது  போன்ற கொடூர குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். உக்ரைன் பொதுமக்கள் மீதான தாக்குதல் தமது நாட்டில் நடைபெற்ற போரை நினைவு படுத்துவதாக கொசோவோ பிரதமர் அல்பின்குர்தி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.