"14 ஐ விடுங்க.. 24க்கு வாங்க".. மோடியை ஒரு கை பார்ப்போம்.. மனம் திறந்த கெஜ்ரிவால்

2014ல்
நரேந்திர மோடி
வந்த விதம் வேறு மாதிரியானது. இப்போது நிலைமை மாறியுள்ளது. 2024ம் ஆண்டு பிரதமர் மோடியை உறுதியுடன் எதிர்கொள்வோம் என்று
டெல்லி
முதல்வர் அரவிந்த்
கெஜ்ரிவால்
கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி
கட்சி தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. காங்கிரஸுக்கு மாற்றான கட்சியாக ஆம் ஆத்மியை பலரும் பார்க்க ஆரம்பித்துள்ளனர். முதலில் டெல்லியில் அக்கட்சி ஆட்சியைப் பிடித்தது.. அடுத்து பஞ்சாப் மாநிலத்தைக் கைப்பற்றியுள்ளது.

நாடு முழுவதும் 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் சார்பில் முதல்வர்கள் உள்ளனர். தற்போது காங்கிரஸுக்கு இணையாக ஆம் ஆத்மியும் 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது, 2 முதல்வர்கள் உள்ளனர். இன்னும் ஒரு வெற்றியை ஆம் ஆத்மி பெற்று விட்டால் காங்கிரஸ் கட்சியை அது முந்தி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சாதனையை அது இமாச்சலப் பிரதேசத்தில் நிகழ்த்தப் போகிறதா அல்லது குஜராத்தில் செய்யப் போகிறதா என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே உள்ளது. இந்த நிலையில் என்டிடிவிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

பஞ்சாப் தேர்தலில் நாங்கள் இவ்வளவு பெரிய வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்களே எதிர்பார்க்காத மிகப் பெரிய வெற்றி அது. நிச்சயம் இது மிகப் பெரிய வெற்றி. பஞ்சாப் மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

குஜராத், இமாச்சலப் பிரதேசத்திலும் நாங்கள் வெற்றி பெறுவோமா என்று கேட்டால் இப்போதே சொல்ல முடியாது. ஆனால் இரண்டு மாநிலங்களுமே எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் காட்சி தருகின்றன. நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம் என்றார் கெஜ்ரிவால்.

இரு மாநிலங்களிலும் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஆம் ஆத்மி கட்சி இப்போதே தயாராக ஆரம்பித்து விட்டது. சமீபத்தில் இமாச்சல் பிரதேசத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் இணைந்து வாகனப் பேரணி நடத்தினார் கெஜ்ரிவால். அதேபோல குஜராத்திலும் அவர்கள் இணைந்து கலந்து கொண்டனர்.

கெஜ்ரிவால் கூறுகையில், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பது எங்களது லட்சியம் அல்ல. மாறாக, மக்களுக்கு நல்லாட்சியை தர வேண்டும். நமது சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்பதே எங்களது முக்கிய நோக்கம். 2014ம் ஆண்டு நான் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட்டேன். அதேபோல 2014 தேர்தலிலும் போட்டியிடுவேனா என்று பலரும் கேட்கிறார்கள்.

அந்த டைம் வேறு.. 2024ம் ஆண்டு தேர்தலில் மோடியை எதிர்த்துப் போட்டியிடுவது குறித்து பார்ப்போம் என்றார் கெஜ்ரிவால்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.