புதுச்சேரி வரும் அமித் ஷாவை சந்திக்க திமுக எம்எல்ஏக்கள் முடிவு

புதுச்சேரி: புதுச்சேரி வரும் மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் மாநில வளர்ச்சிக்கான கோரிக்கை மனுவை திமுக எம்எல்ஏக்கள் சந்தித்து தர முடிவு எடுத்துள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் சிவா இன்று கூறியதாவது: “கடந்த 2021ம் ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் புதுச்சேரிக்கு வந்து பிரச்சாரம் செய்தனர். புதுச்சேரி மாநில மக்களின் நீண்ட கால கோரிக்கையான மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால் தேர்தல் முடிந்தும், புதுச்சேரியில் ஆட்சியில் அமர்ந்து ஓராண்டாக உள்ள நிலையிலும் இதுவரை எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

அதேசமயம் மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர்கள் வாரந்தோறும் புதுச்சேரிக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில் வரும் 24ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். புதுச்சேரி மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகின்றது. அதனால் இவர் அறிவிப்புகள் உடனடியாக அமலுக்கு வர வாய்ப்புகளும் உள்ளது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், அதன்பிறகும் பாஜக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றச் செய்யும் வகையில் அனுமதி பெற்று, திமுக புதுச்சேரி எம்எல்ஏக்கள் சார்பில் புதுச்சேரி வரவுள்ள மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க உள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.