"அண்ணன் வந்துட்டார்"… போஸ்டர் ஒட்டிய ஏபிவிபி.. "ஒழுங்கா இருக்கணும்".. சுளுக்கெடுத்த சுப்ரீம் கோர்ட்!

பாலியல் வன்புணர்வு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான
ஏபிவிபி
அமைப்பின் தலைவரை வரவேற்றும் வாழ்த்தியும் போஸ்டர் அடித்ததால்
சுப்ரீம் கோர்ட்
நீதிபதிகள் கடுப்பாகி விட்டனர். அவரை ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள் என்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுபாங் கோந்தியா. இவர் ஏபிவிபி மாணவர் அமைப்பின் தலைவராக இருக்கிறார். இந்த நிலையில் இவர் ஒரு பெண்ணை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் இவருக்கு மத்தியப் பிரதேச ஹைகோர்ட் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் அப்பெண்.

தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை என்னுடன் அவர் உறவு கொண்டார். குழந்தை உருவானபோது கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்து விட்டார். என்னை மோசடி செய்து விட்டார் என்று அப்பெண் தனது மனுவில் கூறியிருந்தார். மேலும் கோந்தியாவுக்கு ஜாமீன் கிடைத்ததை அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்துக் கொண்டாடியதாகவும், அண்ணன் வந்து விட்டார் என்று அந்த போஸ்டரில் இருப்பதாகவும் அப்பெண் குற்றம் சாட்டியிருந்தார்.

ஹைகோர்ட் எனது குற்றச்சாட்டுக்களையும், நடந்த உண்மைகளையும் சரிவர கவனிக்கவில்லை. அதைக் கருத்தில் கொள்ளவில்லை. இந்த வழக்கின் தீவிரத்தையும் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான நீதிபதி போஸ்டர் விவகாரம் குறித்து கடும் கோபமடைந்தது. 3 பேர் கொண்ட அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதியான ஹீமா கோலி, இது என்ன அண்ணன் வந்துட்டார் என போஸ்டர்.. எதை நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கோபமாக கேட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதியும், உங்க அண்ணனை இந்த ஒரு வாரத்திற்கு ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள் என்று கோந்தியாவின் வக்கீலைப் பார்த்து காட்டமாக கூறினார்.

பின்னர் கோந்தியா, மாநில அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த நவம்பர் மாதம் கோந்தியாவுக்கு மத்தியப் பிரதேச ஹைகோர்ட் ஜாமீன் அளித்தது என்பது நினைவிருக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.