இலங்கை நெருக்கடி: ஒரு கிலோ மஞ்சள் ரூ.3,853; ஒரு கிலோ பிரெட் விலை ரூ.3,583

இலங்கை  இதுவரை இல்லாத அளவில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால்,  பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நெருக்கடி நிலைக்கான காரணமான அரசு பதவி விலக வேண்டும் என கோருகின்றனர். இதற்கிடையில், பல வாரங்களாக, மிகப் பெரிய அளவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களை நிறுத்துமாறு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களிடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் பெட்ரோல்-டீசல்  ஆகியவற்றுக்கும் மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கையில் கொடிகள், பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளுடன் வீதிகளில் இறங்கி உள்ளனர். இலங்கையில் ஒரு வருடத்தில் பெட்ரோலின் விலை 85% அதிகரித்துள்ளது. டீசல் விலை 69% உயர்ந்துள்ளது. எல்பிஜி சிலிண்டர் விலை 84% உயர்ந்துள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் முன்னணி செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய  நேர்காணலில், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் அல்லது ஏன் அவ்வாறு செய்யவில்லை என்பதற்கு மக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தெற்காசியாவில் உள்ள தனது தனது நட்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்  போன்ற நாடுகளிடம் இருந்து, உணவு தானியங்களைக் கடனாகப் பெறுவதற்கு, இலங்கை  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | Srilanka Crisis: வரும் நாட்களில் வரிகள் மேலும் உயரும்; இலங்கை நிதி அமைச்சர் கொடுக்கும் அதிர்ச்சி

இலங்கையில் ஒரு கிலோ மஞ்சளின் தற்போதைய விலை ரூ.3853.  மஞ்சள் விலை 443%  அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பிரெட்டின் விலை ரூ.3583. அதன் விலையும் 443% அதிகரித்துள்ளது. அரிசியின் விலை 93 சதவீதமும், துவரம்பருப்பின் விலை 117 சதவீதமும் அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ அரிசியின் குறைந்தபட்ச விலை தற்போது 200 ரூபாயில் இருந்து 240 ரூபாயைத் தாண்டியுள்ளது.  பால் பவுடர் மற்றும் அரிசி விலை உயர்வின் காரணமாக, பல  அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் பதற்றம்; ஊரடங்கு உத்தரவை மீறி இரவிலும் போராட்டம்

இலங்கையில் மிகப் பெரிய அளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அதனை தீர்க்க இந்தியா பெரும் பங்காற்றி வருகிறது. இந்தியா அண்மையில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் மற்றும் 36 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோலை கடனாக இலங்கைக்கு கொண்டு சென்றது. நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து நிதி உதவி பெறுவது தொர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கிறது.

அதே நேரத்தில், அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான SJB அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக எஸ்.ஜே.பி எம்.பி.க்களிடம் கையெழுத்து வாங்கவும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | Srilanka Crisis: இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலையும் குடும்ப அரசியலும்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.