'வன்முறைக்கு முஸ்லிம் தான் காரணம்!' – பாஜக அமைச்சர் பகீர்

மத்திய பிரதேச மாநிலத்தில் ராம் நவமி ஊர்வலத்தின் போது நடந்த வன்முறைக்கு முஸ்லிம் தான் காரணம் என அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா குற்றம் சாட்டி உள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில உள்ள முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கார்கோன் என்ற இடத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ராம் நவமி பண்டிகையையொட்டி, ஊர்வலம் சென்றது. அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஊர்வலத்தை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இரு தரப்புக்கு இடையேயான சண்டையை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த கலவரத்தில், போலீசார் உட்பட பலர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இதுவரை 94 பேரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களின் வீடுகளை இடிக்க முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் உத்தரவிட்டார். இதன்படி நேற்று, சுமார் 16 வீடுகள், 29 கடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்து தள்ளினர்.

இந்நிலையில், ராம் நவமி ஊர்வலத்தின் போது நடந்த வன்முறைக்கு முஸ்லிம் தான் காரணம் என பாஜகவைச் சேர்ந்த மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

ராம் நவமி ஊர்வலத்தின் போது நடைபெற்ற வன்முறைக்கு முஸ்லிம் தான் காரணம். போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களின் வீடுகளை இடிக்க உத்தரவிட்டது சரி தான். முஸ்லிம்கள் இது போன்ற தாக்குதல்களை நடத்தினால், அவர்கள் நீதியை எதிர்பார்க்கக் கூடாது. காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கலவரக்காரர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.